பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1702 

   (வி - ம்.) மன்னிய - நிலைபெற்ற. உத்தமன் : அருகன். கோன் - சீவகன். ஏத்திய : செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்; ஏத்த என்க.

( 416 )
3015 குருகுலஞ் சீவக குமரன் கோத்திர
மருகலில் காசிப மடிகள் வாழியென்
றெரிமணி முடிநில முறுத்தி யேத்தினான்
புரிமணி வீணைகள் புலம்ப வென்பவே.

   (இ - ள்.) அடிகள்! - அடிகளே!; சீவக குமரன் குருகுலம் - சீவகனாகிய இவன் குலம் குருகுலம்; கோத்திரம் அருகல் இல்காசிபம் - இவன் கோத்திரம் குறைதல் இல்லாத காசிப கோத்திரம்; என்று - என்று அருகிலிருந்தோர் கூற; எரிமணி முடிநிலம் உறுத்தி - எரியும் மணிமுடியை நிலத்திலே பொருத்தி; புரிமணி வீணைகள் புலம்ப ஏத்தினான் - நரம்பினையுடைய அழகிய யாழ் வருந்தத் துதித்தான்.

   (வி - ம்.) என்று - என்ன : எச்சத்திரிபு. வாழி : அசை. துறக்கும் பொழுது குடியும் குலமும் கேட்டே துறப்பித்தல் இயல்பு.

( 417 )
3016 மன்னவன் றுறவெனத் துறத்தன் மாண்பெனப்
பொன்வரை வாய்திறந் தாங்குப் புங்கவ
னின்னுரை யெயிறுவில் லுமிழ வீழ்ந்தது
மின்னியோர் வியன்மழை முழங்கிற் றொத்ததே.

   (இ - ள்.) மன்னவன் துறவு என - அரசன் துறப்பேன் என்று கூற; பொன்வரை வாய் திறந்தாங்கு - பொன்மலை வாய் திறந்தாற்போல; புங்கவன் எயிறு வில் உமிழ - சீவர்த்தமானனின் முறுவல் ஒளியுமிழ; துறத்தல் மாண்பு என இன் உரைவீழ்ந்தது - (இனி) நீ துறப்பதே மாட்சியென இனிய உரை வெளிப்பட்டது; ஓர் வியன் மழை மின்னி முழங்கிற்று ஒத்தது - (அவ்வுரை) ஒரு பெருமுகில் மின்னி முழங்கியது போன்றது.

   (வி - ம்.) வீழ்ந்தது என்பதைத் தனியே எடுத்து, 'நின்மனம் துறவில் வீழ்ந்தது' என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். எயிறுவில் உமிழ்ந்ததற்கு மின்னுவமை.

( 418 )

30.சீவகன் துறவு

வேறு

3017 காய்களிற்றி னிடைமருப்பிற் கவளம்போன்
  றேமாராக் கதியுட் டோன்றி
யாங்களிய வெவ்வினையி னல்லாப்புற்
  றஞ்சினே னறிந்தார் கோவே