பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1709 

   (வி - ம்.) ஏமம் - உயிர்க்குப் பாதுகாவலான என்க. இம்மி - ஓர் அளவை. நாமம் - அச்சம், நரபதி : சீவகன். அரோ : அசை.

( 429 )
3028 மணியுறை கழிப்பது போல மங்கலப்
பணிவரு பைந்துகி னீக்கிப் பாற்கட
லணிபெற வரும்பிய வருக்க னாமெனத்
திணிநிலத் தியன்றதோர் திலக மாயினான்.

   (இ - ள்.) மணி உறை கழிப்பதுபோல - மணியை மறைத்த உறையைக் கழிக்கின்ற தன்மைபோல; மங்கலப் பணிவரு பைந்துகில் நீக்கி - அழகிய, குறைகூறற்கியலாத (தன் மேனியை மறைத்த) பசிய துகிலை நீக்கி; பாற்கடல் அணிபெற அரும்பிய அருக்கன் - பாற்கடலிலே அழகுறத் தோன்றிய ஞாயிறு; திணிநிலத்து இயன்றது ஆம் என - திண்மை பெற்ற நிலத்திலே வந்து பொருந்திய தாம் என்று கூறும்படி; ஓர் திகலம் ஆயினான் - ஒரு திலகமானான்.

   (வி - ம்.) பணிவரு - குறை கூறற்கரிய.

   மணி - சீவகன் உடம்பிற்கும் உறை அதனை மறைத்துக் கிடந்த ஆடைக்கும் உவமைகள். மீண்டும் பாற்கடல் ஆடைக்கும் அருக்கன் சீவகனுக்கும் உவமைகள் என்க. அணுத்திணிந்த நிலம் என்க.

( 430 )
3029 மலிந்தநன் மாலைகள் வண்ணப் பூந்துகி
னலிந்துமின் னகுமணி நன்பொற் பேரிழை
மெலிந்தனென் சுமந்தென நீக்கி மேனிலைப்
பொலிந்ததோர் கற்பகம் போலத் தோன்றினான்.

   (இ - ள்.) மலிந்த நல்மாலைகள் - மிகுதியான நல்ல மாலைகளும்; வண்ணப் பூந்துகில் - அழகிய பூந்துகிலும்; மின் நலிந்து நகுமணி - மின்னை வாட்டிப் பழிக்கும் மணியும்; நன்பொன் பேர்இழை - அழகிய பொன்னாலாகிய பேரணியும்; சுமந்து மெலிந்தனென் என நீக்கி - சுமந்து மெலிந்தேன் என்று அவற்றை நீக்கி; மேல்நிலைப் பொலிந்தது ஓர் கற்பகம்போலத் தோன்றினான் - மேல் நிற்றலால் பொலிந்தது ஒரு கற்பகம் உண்டேல் அதுபோலத் தோன்றினான்.

   (வி - ம்.) மலிந்த - மிக்க, வண்ணம் - நிறம், மின் நலிந்து நகுமணி என்க. சுமந்து மெலிந்தனென் என மாறுக. மலிந்த என்பது தொடங்கி மெலிந்தனென் என மாறுக. மலிந்த என்பது தொடங்கி மெலிந்தனென் என்னுந் துணையும் கற்பகத்தின் கூற்று. சீவகன் உட்கோள் எனினுமாம். பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பு மிகையாங்கால் அவ்வுடம்பின்மேல் அணியப்பட்ட மாலைகள் வண்ணப் பூந்துகில்கள் அணிகள் நீக்கப்படவேண்டுமென்பது சொல்லாமலேயமையும்.

( 431 )