பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1770 

   (இ - ள்.) நிலவி ஒளி உமிழும் நீள்இலை வேல் கண்ணார் - நிலைபெற்று ஒளியைச் சொரியும் நீண்ட இலை வடிவான வேலனைய கண்ணினார்; கலவித் தூ தாகிய காமக்கை - கலவிக்குத் தூதாகிய காமம் என்கிற கையாலே; புலவிப்படை காய்த்திப் பயில - புலவியாகிய படையைக் காய்ச்சி (அவர்மேல்) எய்வதனாலே; பூச்செய்த கோலம் - காமன் அம்பு செய்த கோலம்; உலவித் துறக்கம் ஒளி பூத்தது - எங்கும் பரந்து துறக்கம் அவ்வொளியின் பொலிவைப் பெற்றது.

   (வி - ம்.) என்றது, துறக்கத்துள்ளார் இவர்கள் இன்ப நுகர்ச்சியைப் புகழ்ந்தார் என்பதாம்.

   நிலவி - நிலைபெற்று. நீளிலை : வினைத்தொகை. கண்ணார் என்றது தெய்வ மகளிரை. காமக்கை - காமமாகிய கை. காய்த்தி - காய்ச்சி. உலவி - பரந்து. பூச்செய்த கோலம் - மலராகிய காமனுடைய அம்புகள் அவர்கள் மேற்பட்டுச் செய்த கோலம்.

( 542 )
3141 புருவச் சிலைநுதற் பொன்றுஞ்சு மல்கு
லுருவத் துடியிடையா ருடலுப் பாகத்
திருவிற் றிகழ்காமத் தேன்பருகித் தேவர்
பொருவற் கரிய புலக்கடலு ளாழ்ந்தார்.

   (இ - ள்.) நுதல் சிலை புருவம் பொன் துஞ்சும் அல்குல் உருவத்துடி இடையார் - நெற்றியையும் வில்லினைய புருவத்தையும் மேகலை துயிலும் அல்குலையும் அழகிய துடி போன்ற இடையையும் உடைய காதலியரின்;' ஊடல் உப்பு ஆக - ஊடலே இனிமையாக; திருவின் திகழ் காமத் தேன் பருகி - திருவினால் விளங்குங் காமமாகிய தேனைப் பருகி; பொருவற்கு அரிய புலக் கடலுள் ஆழ்ந்தார் - உவமை கூறுதற்கு அரிய ஐம்புலக் கடலிலே முழுகினார்.

   (வி - ம்.) சிலைப்புருவம் என மாறுக. பொன் - மேகலை, உருவம் : அழகு உப்பு - இனிமை. திருவினால் திகழும் காமமாகிய தேன் என்க. புலக்கடல்-சுவையொளி ஊறு ஓசை நாற்றம் என்னும் புலமாகிய கடல் என்க. இக் கருத்தமை திருக்குறள் வருமாறு:

”ஊடிப் பெறுகுவம் கொல்லே நுதல்வெயர்ப்பக்

   கூடலில் தோன்றிய உப்பு.”-1328

( 543 )

வேறு

3142 முகடு மணியழுத்தி முள்வைர
  முள்வேய்ந்து முத்தம் வாய்ச்சூழ்ந்
தகடு பசுமணியார்ந் தங்காந்
  திருள்பருகி யடுபால் விம்மிப்