பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 182 

322 அருப்பிள முலையவர்க் கனங்க னாகிய
மருப்பிளம் பிறைநுதல் மதர்வை வெங்கதிர்
பரப்புபு கிடந்தெனக் கிடந்த நம்பியை
விருப்புள மிகுதியின் விரைவி னெய்தினான்.

   (இ - ள்.) மருப்புஇளம் பிறைநுதல் அரும்புஇள முலையவர்க்கு அனங்கன் ஆகிய - இரு முனைகளையுடைய இளம்பிறை அனைய நெற்றியையும் அரும்பனைய இளமுலைகளையும் உடைய மங்கையர்க்குக் காமனாதற்காக; மதர்வை வெங்கதிர் பரப்புபு கிடந்தென - மயக்கத்தைத் தரும் இளஞாயிறு தன் கதிர்களைப் பரப்பிக் கிடந்தாற்போல; கிடந்த நம்பியை - கிடந்த குழந்தையை; விருப்புஉளம் மிகுதியின் விரைவின் எய்தினான் - விருப்பம் உள்ளத்திலே மிகுந்ததனாற் கடிதின் எய்தினான்.

 

   (வி - ம்.) அரும்பு: அருப்பு என வலித்தது செய்யுள் விகாரம். 'கிடந்ததென' என்பதும் 'கிடந்தென' ஆனது விகாரம். பரப்புபு - பரப்பாநிற்க; வினையெச்சம்.

( 293 )
323 புனைகதிர்த் திருமணிப் பொன்செய் மோதிரம்
வனைமலர்த் தாளினான் மறைத்து வண்கையாற்
றுனைகதிர் முகந்தென முகப்பத் தும்மினான்
சினைமறைந் தொருகுரல 'சீவ' என்றதே.

   (இ - ள்.) வனைமலர்த் தாரினான் - மலரால் வனையப்பெற்ற மாலையினான்; புனைகதிர் திருமணிப் பொன்செய் மோதிரம் மறைத்து - அழகிய ஒளிவிடும் மணியையுடைய பொன்னாழியை(ப் பிறரறியாதிருக்க) மறைத்து; வண்கையால் துனை கதிர் முகந்துஎன முகப்ப - வண்மையுடைய கையால் விரையுங் கதிரை முகப்பதுபோல வாரியெடுக்க; தும்மினான் - (நம்பி) தும்மினான்; ஒருகுரல் சினை மறைந்து சீவ என்றது - (அப்போது) ஒரு குரல் மரக்கிளை மறைவிலிருந்து (தெய்வத்தால்) சீவிப்பாயாக என்று கூறப்பட்டது.

 

   (வி - ம்.) விசயை அச்சத்தால் தன் மனத்திலேயே வாழ்த்திக் கொண்டாள் என்பது தோன்ற ஒரு குரல் என்றார்.

 

   வனைதல் - கட்டுதல். துனைகதிர் - இருளை நீக்க விரையுங் கதிர்' எல்லாப் புலன்களுக்கும் விருப்பமுண்டாவதால். 'முகப்ப' என்றார். 'மன்னெயின் முகவை' (புறநா. 373) என்றார். பிறரும். தும்முதல் நன்னிமித்தம். சீவ வியங்கோட் பொருளில் வந்த வடசொல்.

 

   சீவகசாமியை எடுத்து வளர்த்தற்குரிய அறமுடைய கைஎன்பார்' ”வண்கை” என்றார். துனைகதிர்: வினைத்தொகை.

( 294 )