பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 201 

  ”எர்குலா முகத்தினாளை இறைமுக மெடுத்து நோக்கித்  
  தார்குலா மலங்கன் மார்பன் தாயரை நினைந்து நைந்தான்” (கிட்கிந்தை - 51)  

   என்று அழகுற அமைத்துக்கொண்டனர்.

( 326 )
356 பெண்மைநாண் வனப்புச் சாயல்
  பெருமட மாது பேசி
னொண்மையி னொருங்கு கூடி
  யுருவுகொண் டனைய நங்கை
நண்ணிய நுங்கட் கெல்லா
  மடைக்கல மென்று நாடுங்
கண்ணிய குலனுந் தெய்வங்
  கரந்துரைத் தெழுந்த தன்றே.

   (இ - ள்.) பெண்மை நாண் வனப்பு சாயல் பெருமடம் மாது பேசின் - அமைதித் தன்மையும் நாணும் அழகும் மென்மைத் தன்மையும் பெருமைமிக்க மடனும் காதலும் ஆகியவற்றை ஆராயின்; ஒண்மையின் ஒருங்கு கூடி உருவு கொண்ட அனைய நங்கை - அவை தாம் விளக்கமுற ஒன்று கூடி ஒரு வடிவு கொண்டாற் போலும் நங்கையாகிய இவள்; நண்ணிய நுங்கட்கு எல்லாம் அடைக்கலம் என்று - நற்பண்பெலாம் பொருந்திய நுங்கட்கு எவ்வகையானும் அடைக்கலமாயினள் என்று கூறி; நாடும் கண்ணிய குலனும் கரந்து உரைத்து - விசயையின் நாட்டையும் கருதற்குரிய குலத்தையும் மறைத்துக் கூறி; தெய்வம் எழுந்தது - கூனி வடிவான தெய்வம் போதற்கு ஒருப்பட்டது.

 

   (வி - ம்.) பெண்மை -அமைதித் தன்மை. மடம் - கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை. மாது - காதல் : மாதர் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது.

( 327 )

வேறு

 
357 உறுதி சூழ்ந்தவ ணோடலி னாயிடை
மறுவில் வெண்குடை மன்னவன் காதலஞ்
சிறுவன் தன்மையைச் சோ்ந்தறிந் திவ்வழிக்
குறுக வம்மெனக் கூனியைப் போக்கினாள்.

   (இ - ள்.) உறுதி சூழ்ந்து அவண் ஓடலின் - விசயைக்கு வேண்டும் நலன்களை ஆராய்ந்தவாறு தன் இருப்பிடத்திற்குப் போகத் தெய்வம் ஒருப்பட்டதால்; மறுஇல் வெண்குடை மன்னவன் காதல் அம் சிறுவன் தன்மையை - குற்றமற்ற