பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 211 

மலைமறைந்து நீங்க நின்ற, குங்குமம் அணிந்த தோளையுடைய சீவகனை எண்ணி; கன்று ஒளித்து அகல வைத்த கறவையின் கனிந்து நின்றார் - கன்றை மறைத்துப் பாலுண்ணாமற் வைக்கப்பட்ட பசுவைப் போல அன்பிலே கனிந்து நின்றார்.

 

   (வி - ம்.) 'மின் தெளித்து எழுதி அன்ன நுசுப்பின் நல்லார்' என்பது, 'தெளித்த சொல் தேறியார்க்கு' (குறள் - 1154) என்றாற் போல வந்தது. இனி மின்னைக் கரைத்தெழுதி அன்ன நல்லாருமாம். புறம் - தம் மெய்யிடம்.

 

   இதனாற் குலக் கன்னியரைக் கூறினார்.

 

   குன்று ஒளித்தொழிய நின்றதோள் - இவற்றை ஒவ்வேமென்று மலைகள் மறைந்துபோதற்குக் காரணமான திண்மையும் பெருமையுமுடைய தோள் என்க. கறவை - கற்றா.

( 342 )
372 விலைபகர்ந் தல்கும் விற்கும்
  வேலினும் வெய்ய கண்ணார்
முலைமுகந் திளையர் மார்பம்
  முரிவில ரெழுதி வாழுங்
கலையிகந் தினிய சொல்லார்
  கங்குலும் பகலு மெல்லாஞ்
சிலையிகந் துயர்ந்த திண்டோட்
  சீவகற் கரற்றி யாற்றார்.

   (இ - ள்.) அல்குல் விலை பகர்ந்து விற்கும் வேலினும் வெய்ய கண்ணார் - அல்குலை விலை கூறி விற்றற் குரிய வேலினுங் கொடிய களவுறு கண்ணினரும், இளையர் மார்பம் முகந்து முரிவிலர் எழுதி வாழும் கலை யிகந்த இனிய சொல்லார் - இளையருடைய மார்பினை முலையினால் முகந்து நீங்காமல் எழுதி வாழும், கலையினைக் கற்ற இன்மொழியாரும்; கங்குலும் பகலும் எல்லாம் சிலை யிகந்து உயர்ந்த திண்டோள் சீவகற்கு அரற்றி ஆற்றார் - இரவும் பகலுமாகிய எல்லாக் காலங்களிலும், விற்கலையைக் கற்று உயர்ந்த திண்ணிய தோளான் சீவகனை நினைத்து அழுது ஆற்றாராயினர்.

 

   (வி - ம்.) அல்குல் விற்குங் கண்ணார் - அல்குலை விற்றற்குக் காரணமான கண்ணார் : இவர்கள் பரத்தையரிற் கன்னியர். இனிய சொல்லார் : போகம் நுகரும் பரத்தையர்.

 

   இவர்கள் இற்பரத்தையரும் சேரிப்பரத்தையரும். இற்பரத்தையர் மட்டும் ஒருவனுக்கே உரியர்; காமக்கிழத்தியர் என்றுங் கூறப்படுவர். மற்றவர் (சேரிப்பரத்தையர்.) யாரையும் விரும்புவோர் ; வரைவின் மகளிர்.