பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 214 

நஞ்சினையுடைய பாம்பினிடத்தே ; வெறிபுலம் கன்றி நின்றார் வேதனைக் கடலுள் நின்றார் - களிப்பை ஊட்டும் புலன்களிலே அடிப்பட்டு நின்றவர்கள் துன்பக் கடலிலே நின்றாராவர்.

 

   (வி - ம்.) தீவினை கழிய நின்ற நெறியைச் 'சன்மார்க்கம்' என்றும், இன்ப நிறைகடலை, 'அனந்தசுகம்' என்றும் வடநூல்கள் கூறும். 'நிறைக்கடல்' என்று பாடமாயின் இன்பப் பெருக்கினையுடைய கடல் என்க.

 

   பொறி-மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன. புலம்-சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், என்பன, அழல்-நஞ்சு; உவமையாகு பெயர்.

( 346 )
376 கூற்றுவன் கொடிய னாகிக்
  கொலைத்தொழிற் கருவி சூழ்ந்து
மாற்றரும் வலையை வைத்தான்
  வைத்ததை யறிந்து நாமு
நோற்றவன் வலையை நீங்கி
  நுகர்ச்சியி லுலக நோக்கி
யாற்றுறப் போத றேற்றா
  மளியமோஒ பெரிய மேகாண்.

   (இ - ள்.) கூற்றுவன் கொடியன் ஆகிக் கொலைத் தொழில் கருவி சூழ்ந்து-கூற்றுவன் கொடுமையுடையவனாகிக் கொலைத் தொழிலுக்குரிய கருவிகளை ஆராய்ந்து; மாற்ற அரும் வலையை வைத்தான்-நீக்க முடியாத வலையை வைத்துள்ளான்; வைத்ததை நாமும் அறிந்து நோற்று - அதனை அறிவுடைய நாமும் அறிந்து தவம்புரிந்து; அவன் வலையை நீங்கி - அவன் வலைக்குத் தப்பி; நுகர்ச்சிஇல் உலகம் நோக்கி - இதற்குமுன் துய்த்தறியாத உலகமான வீட்டை நோக்கி; ஆறு உறப்போதல் தேற்றாம் - வழிக்கொண்டு செல்லுதலைத் தெளியோம் ; அளியம் ஓஒ பெரியம் காண் -இரங்கத் தக்க நாம் பெரியோம் காண்.

 

   (வி - ம்.) கருவி : ஐயும் பித்தும் வளியும் ஆகிய (வலைகட்டும்)வார்கள். வலை : வாழ்நாளைத் தரும் வினை. ஓஒ பெரியம்: இகழ்ச்சி.

( 347 )
377 பேரஞ ரிடும்பை யெல்லாம்
  பிளந்திடும் பிறப்பு நீக்கு
மாரமிர் தரிதிற் பெற்றா
  மதன்பயன் கோட றேற்றா
மோருமைம் பொறியு மோம்பி
  யுளபகல் கழித்த பின்றைக்
கூரெரி கவரும் போழ்திற்
  கூடுமோ குறித்த வெல்லாம்.