இந்நாவலந்தண் பொழிலில் ஏமாங்கதம் ஏமாங்கதம் என்று தன்னிசையால் திசைபோய நாடொன்று உளது. நீர்வளமும் நிலவளமும் பிற வளங்களும் நிரம்பிய இவ் வேமாங்கத நன்னாட்டை இராசமாபுரம் என்னும் சிறந்த நகரத்தின்கண்ணிருந்து சச்சந்தன் என்பான் செங்கோலோச்சினன். இம் மன்னர் மன்னன் கட்டிளமையும், பேரழகும், பேராற்றலும், நுண்ணறிவும், வண்மையும், பிறவும் ஒருங்கேயுடையனாய் விளங்கினான். இவன் அருட்குடைத் தண்ணிழலில் வையகம் மகிழ்ந்து வைகியது.
|
|
இஃதிங்ஙனமாக, ஒருசில திங்களிலேயே விசயை கருவுற்றனள். ஒருநாள் விசயை மூன்று கனாக்கண்டு அவற்றைச் சச்சந்தனுக்குணர்த்தி அவற்றின் பயன்களைத் தனக்குணர்த்தும்படி வேண்டினாள். அக் கனவுகளுள் ஒன்று தனக்கு வரும் கேட்டினைக் குறிப்பதுணர்ந்த சச்சந்தன், தன் உள்ளுணர்வின் தூண்டுதலாலே ஒரு தச்சனை யழைத்து வான்வழிப் பறந்து செல்லுமொரு மயிற்பொறி செய்வித்தனன். அம் மயிற் பொறியினை வானத்தே செலுத்தவும் கீழிறக்கவும் விசயைக்குக் கற்பித்தனன்.
|
|