பக்கம் எண் :

  22 

1. நாமகள் இலம்பகம்

 

(கதைக் சுருக்கம்)

 

   இந்நாவலந்தண் பொழிலில் ஏமாங்கதம் ஏமாங்கதம் என்று தன்னிசையால் திசைபோய நாடொன்று உளது. நீர்வளமும் நிலவளமும் பிற வளங்களும் நிரம்பிய இவ் வேமாங்கத நன்னாட்டை இராசமாபுரம் என்னும் சிறந்த நகரத்தின்கண்ணிருந்து சச்சந்தன் என்பான் செங்கோலோச்சினன். இம் மன்னர் மன்னன் கட்டிளமையும், பேரழகும், பேராற்றலும், நுண்ணறிவும், வண்மையும், பிறவும் ஒருங்கேயுடையனாய் விளங்கினான். இவன் அருட்குடைத் தண்ணிழலில் வையகம் மகிழ்ந்து வைகியது.

 

   இம் மன்னன் தன் மாமனாகிய விதையநாட்டரசன் மகள் விசயை என்பவளை இனிதின் மணந்தான். விசயை ஒப்பற்ற பேரழகுடையவள்; நற்குணங்கட்கு உறையுள் போன்றவள். கலங்காக் கற்புடைய காரிகை. சச்சசந்தன் இவள் பெண்மை நலத்திற் பெரிதும் ஈடுபாடுடையனாய் அவளை இமைப்பொழுதும் பிரியவியலாதவனாயினன். அவளோடு உடனுறைதற்குத் தன், அரசியற் கடமைகள் இடையூறாதல் கண்டு தன் அமைச்சருள் ஒருவனாகிய கட்டியங்காரனை அழைத்து அரசாட்சியை அவன் பால் ஒப்புவித்துத் தான் உவளகத்தே விசயையோடு நொடிப் பொழுதும் பிரிவிலனாய் உறைந்தின்புற்றனன்.

 

   இஃதிங்ஙனமாக, ஒருசில திங்களிலேயே விசயை கருவுற்றனள். ஒருநாள் விசயை மூன்று கனாக்கண்டு அவற்றைச் சச்சந்தனுக்குணர்த்தி அவற்றின் பயன்களைத் தனக்குணர்த்தும்படி வேண்டினாள். அக் கனவுகளுள் ஒன்று தனக்கு வரும் கேட்டினைக் குறிப்பதுணர்ந்த சச்சந்தன், தன் உள்ளுணர்வின் தூண்டுதலாலே ஒரு தச்சனை யழைத்து வான்வழிப் பறந்து செல்லுமொரு மயிற்பொறி செய்வித்தனன். அம் மயிற் பொறியினை வானத்தே செலுத்தவும் கீழிறக்கவும் விசயைக்குக் கற்பித்தனன்.

 

   பெறலருந்திருப் பெற்றபின் யாவர்க்குஞ் சிந்தனை பிறிதாதல் இயல்பன்றோ? அரசாட்சிப் பொறுப்பனைத்தும் தன்பால் எய்தியிருக்கும் இச்செவ்வி இதனைத் தன்னுடையதாகவே ஆக்கிக்கொள்ளத் தகுந்ததொரு செவ்வியாகும் என்று கருதிய கட்டியங்காரன் அமைச்சரோடு ஆராய்ந்தனன்; அவருட் சிலர் இக் கருத்தினை எதிர்த்துக் கட்டியங்காரனைத் திருத்த முயன்றனர்; கட்டியங்காரன் அவர் நல்லுரை கேளானாய்த் தான்