பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 224 

391 இனையைநீ யாய தெல்லா
  மெம்மனோர் செய்த பாவ
நினையனீ நம்பி யென்று
  நெடுங்கணீர் துடைத்து நீவிப்
புனையிழை மகளிர் போலப்
  புலம்பனின் பகைவ னின்றா
னினைவெலா நீங்கு கென்ன
  நெடுந்தகை தேறி னானே.

   (இ - ள்.) நம்பி நீ இனையை ஆயது எல்லாம் எம்மனோர் செய்த பாவம் - நம்பியே நீ இந்நிலையினை ஆனதெல்லாம் எம்போல்வார் செய்த தீவினை; நீ நினையல் என்று - நீ (சென்றதை) நினையாதே என்று ; நெடுங்கண் நீர் துடைத்து, நீவி - நீண்ட கண்களினின்று வடியும் நீரைத் துடைத்து; மெய்யைத் தடவிக் கொடுத்து; நின் பகைவன் நின்றான் - நின் பகைவன் இருக்கிறான் (ஆதலின்;) புனை இழை மகளிர் போலப் புலம்பல் - அணிகலன் அணிந்த பெண்களைப் போல வருந்தாதே ; நினைவு எலாம் நீங்குக என்ன - எல்லாக் கவலைகளையும் விடுக என்று (ஆசிரியன் தேற்ற); நெடுந்தகை தேறினான் - சீவகன் தெளிந்தான்.

 

   (வி - ம்.) 'நீர்துடைத்து' என்றது அரற்று. (யாது செய்சேவனென்றல்.) 'நினைவெலாம்' என்றது அவலம் (வருத்தம்). இங்ஙனம் அவலம், கவலை, அரற்று, கையாறு என்னும் நான்கு மெய்ப்பாடும் கூறப்பட்டமை தெளிக.

 

   'எம்மனோர் செய்த பாவம் நீக்குகை காரணமாக நினையல்' என்றும் ஆம்.

( 362 )
392 மலைபக விடிக்குஞ் சிங்க
  மடங்கலின் முழங்கி மாநீ
ரலைகடற் றிரையிற் சீறி
  யவனுயிர் பருக லுற்றுச்
சிலையொடு பகழி யேந்திக்
  கூற்றெனச் சிவந்து தோன்று
மிலையுடைக் கண்ணி யானை
  யின்னணம் விலக்கி னானே.

   (இ - ள்.) அவன் உயிர் பருகல் உற்று - கட்டியங்காரன் உயிரை உண்ண விரும்பி; மலைபக இடிக்கும் சிங்க மடங்கலின் முழங்கி - மலை பிளக்கத் தகர்க்கும் சிங்கக்குட்டி போல முழங்கி ; மாநீர் அலைகடல் திரையின் சீறி - பெரிய நீர்ப்பரப்பான கடலலை போல ஆர்த்து ; சிலையொடு பகழி ஏந்தி - வில்லையும்