பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 233 

கொடிய வில் ஏந்திய உழவனான சீவகன் அதனைக் கேட்டு; வாள் இயங்கு உருவப் பூணோய் - ஒளிவிடும் அழகு அணிகளையுடையாய்!; தாள் இயல் தவங்கள் தாய்ஆ தந்தைநீ ஆகி - முயற்சியால் பிறந்த தவங்கள் தாயாக, நீ தந்தையாகி; என்னைப் படைத்தனை வாழி என்ன - என்னை ஆக்கினை, வாழ்வாயாக என்று கூற; மீளி அம் களிறு அனாய்! யான் மெய்ந்நெறி நிற்பல் என்றான் - பெருமையுடைய அழகிய களிறு போன்றவனே! யான் உண்மையான தவநெறியிலே நிற்பேன் என்று ஆசிரியன் கூறினான்.

 

   (வி - ம்.) நல்வினையால், இக் கலைகளைக் கற்றுத் தான் வேறோரு பிறப்பானமை கூறினான்.

 

   தாயாக என்பது ஈறுகெட்டது. உழுவை - புலி. தாள் - முயற்சி மெய்ந்நெறி - தவநெறி. நிற்பல் : தன்மை ஒருமை.

( 376 )
406 மறுவற மனையி னீங்கி
  மாதவஞ் செய்வ லென்றாற்
பிறவற மல்ல பேசார்
  பேரறி வுடைய நீரார்
துறவறம் புணர்க வென்றே
  தோன்றறா டொழுது நின்றா
னறவற மலர்ந்த கண்ணி
  நன்மணி வண்ண னன்னான்.

   (இ - ள்.) நறவு அற மலர்ந்த கண்ணி நல் மணிவண்ணன் அன்னான் - நன்மணம் தன்னிடத்தே தங்க மலர்ந்த கண்ணியையுடைய நீல வண்ணனான கண்ணனைப் போன்ற சீவகன்; மறு அறமனையின் நீங்கி மாதவம் செய்வல் என்றால் - குற்றம் நீங்க மனையிலிருந்து நீங்கிப் பெருந்தவம் செய்வேன் என்றால்; பேரறிவு உடைய நீரார் பிற அறம் அல்ல பேசார் - பேரறிவு உடைய தன்மையோர் விலக்குஞ் சொற்களாகிய அறமல்லாதவற்றைக் கூறார்; துறவறம் புணர்க என்று தோன்றல் தாள் தொழுது நின்றான் - துறவறத்திலே செல்க என்று ஆசிரியன் தாளை வணங்கிநின்றான்.

 

   (வி - ம்.) ஒருவன் துறப்பேன் என்றால் அறிவுடையோர் விலக்கார் ஆதலின், இவனும் அதற்கு உடன்பட்டானெனக் கவியின் கூற்றாகவும் ஆக்கலாம். ['பேரறிவுடைய நீரார் மாதவஞ் செய்வல் என்றால்' என்று கொண்டு கூட்டுவர் நச்சினார்க்கினியர்.]

( 377 )
407 கைவரை யன்றி நில்லாக்
  கடுஞ்சின மடங்க லன்னான்
றெவ்வரைச் செகுக்கு நீதி
  மனத்தகத் தெழுதிச் செம்பொற்