பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 273 

474 தகைமதி யெழிலை வாட்டுந்
  தாமரைப் பூவி னங்கட்
புகைநுதி யழல வாட்கட்
  பென்னனாள் புல்ல நீண்ட
வகைமலி வரைசெய் மார்பின்
  வள்ளலைக் கண்டு வண்டார்த்
தொகைமலி தொறுவை யாளுந்
  தோன்றன்மற் றின்ன கூறும்.

   (இ - ள்.) தகைமதி எழிலை வாட்டும் தாமரைப் பூவின் அங்கண் - பெருமை மிக்க திங்களின் எழுச்சியை வருத்தும் பொற்றாமரைப் பூவில் இருக்கும்; புகை நுதி அழல வாள் கண் பொன்னனாள் புல்ல - புகையும் நுனி அனல் வீசும் வாளனைய கண்களையுடைய திருமகள் தழுவுமாறு; நீண்ட வகைமலிவரை செய்மார்பின் வள்ளலைக் கண்டு - அகன்ற அழகின் வகை நிறைந்த மலையனைய மார்பினையுடைய சீவகனைக் கண்டு; வண்தார்த் தொகை மலி தொறுவை ஆளும் தோன்றல் இன்ன கூறும் - வளவிய மாலை அணிந்த, தொகை நிறைந்த ஆனிரையை ஆளும் நந்தகோன் இவற்றைக் கூறினான்.

( 66 )
475 கேட்டிது மறக்க நம்பி
  கேண்முதற் கேடு சூழ்ந்த
நாட்டிறை விசயை யென்னு
  நாறுபூங் கொம்ப னாளை
வேட்டிறைப் பார மெல்லாங்
  கட்டியங் காரன் றன்னைப்
பூட்டிமற் றவன்ற னாலே
  பொறிமுதல் அடர்க்கப் பட்டான்.

   (இ - ள்.) நம்பி இது கேட்டு மறக்க - நம்பியே ! இதனைக் கேட்டு மறப்பாயாக; கேள் முதல் கேடு சூழ்ந்த நாட்டு இறை - நட்பு முதலாக நாட்டிற்குக் கெடுதியை எண்ணிய சச்சந்தன்; விசயை என்னும் நாறு பூங்கொம்பனாளை வேட்டு - விசயை என்னும் மணமலர்க் கொம்பு போல்வாளை மணந்து; இறைப் பாரம் எல்லாம் கட்டியங்காரன் தன்னைப் பூட்டி - அரசு உரிமை முழுதையும் கட்டியங்காரனுக்குச் சேர்த்து; அவன் தன்னாலே பொறிமுதல் அடர்க்கப் பட்டான் - அவனாலே தன் உயிர் கொள்ளப்பட்டான்.