பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 284 

வேறு

 
491 கள்வாய் விரிந்த கழுநீர்பிணைந் தன்ன வாகி
வெள்வேன் மிளிர்ந்த நெடுங்கண்விரை நாறு கோதை
முள்வா யெயிற்றூ றமுதம்முனி யாது மாந்திக்
கொள்ளாத வின்பக் கடற்பட்டனன் கோதைவேலான்.

   (இ - ள்.) கள்வாய் விரிந்த கழுநீர் பிணைந்த அன்ன ஆகி - இன்ப மூட்டலின்) தேன் வாயிலே பரந்த கழுநீர் மலர்கள் பிணைந்தாற் போன்றன ஆகி; வெள்வேல் மிளிர்ந்த - (துனப மூட்டலின்) வெள்ளிய வேல்போல விளக்கமுற்றனவாகிய; நெடுங்கண் விரை நாறு கோதை -நீண்ட கண்களையுடைய மணங்கமழுங் கோதையாளின்; முள்வாய் எயிறு ஊறு அமுதம் முனியாது மாந்தி - கூரிய பற்களிற் சுரக்கும் அமுதத்தை வெறாமல் அருந்தி; கொள்ளாத இன்பக் கடல் கோதை வேலான் பட்டனன் - கரைபுரண்ட இன்பக் கடலிலே மாலை யணிந்த வேலான் அழுந்தினன்.

( 83 )
492 தீம்பாற் கடலைத் திரைபொங்கக் கடைந்து தேவர்
தாம்பாற் படுத்த வமிர்தோதட மாலை வேய்த்தோ
ளாம்பாற் குடவர் மகளோவென் றரிவை நைய
வோம்பா வொழுக்கத் துணர்வொன்றில னாயி னானே.

   (இ - ள்.) தீ பால் கடலைத் திரை பொங்கக் கடைந்து - இனிய பாற்கடலை அலை பொங்குமாறு கடைந்து; தேவர் தம்பால் படுத்த அமிர்தோ? - வானவர் தம்மிடம் கொண்ட அமிர்தமோ?; தடமாலை வேய்த் தோள் ஆம்பால் குடவர் மகளோ? என்று - பெரிய மாலைகளை அணிந்த மூங்கிலனைய தோள்களை உடைய பயன்படும் பாலையுடைய இடையர் மகளோ? என்று மயங்கியவனாகி; அரிவை நைய - கோவிந்தை மெலியுமாறு; ஓம்பா ஒழுக்கத்து - தடை செய்ய முடியாத இன்ப ஒழுக்கத்திலே; உணர்வு ஒன்றிலன் ஆயினான் - தானும் அறிவு மயங்கியவனானான்.

 

   (வி - ம்.) 'தம்பால்' என்பது 'தம்பால்' என விகாரப்பட்டது. ஆம் : ஆகும் - பயன்படுகிற. 'அம்பால் ' என்பது 'ஆம்பால்' என விகாரப்பட்டது என்றும், 'ஆம்பால்' எனவே கொண்டு 'பெரும்பாலும்' என்று பொருள் கூறலாமென்றும் கருதுவர் நச்சினார்க்கினியர்.

 

   இவ்விலம்பகம் வீரமகளைச் சேர்ந்தமை கூறிற்று.

( 84 )

கோவிந்தையார் இலம்பகம் முற்றிற்று