பக்கம் எண் :

  285 

3. காந்தருவ தத்தையார் இலம்பகம்

 

(கதைச் சுருக்கம்)

 

   சீவகன் முதலியோர் இராசமாபுரத்தின்கண் இவ்வாறு இனிது உறைந்தனராக; அந்நகரத்து வாழ்பவனாகிய சீதத்தன் என்னும் வணிகன் தன் பழவினைப் பயத்தால் தான் ஈட்டிய பொருளெல்லாம் கெட்டமையால், மனமுடைந்தான். தன்பால் எஞ்சியிருந்த ஒரே மரக்கலத்தைத் திரைகடலிலே ஓட்டி மீண்டும் பொருளீட்டத் துணிந்தனன். அம் மரக்கலங்கொண்ட பண்டங்களை ஏற்றிப் பணிமக்களோடு அதனை அலைகடலில் ஊர்ந்து ஓர் அழகிய தீவகம் அடைந்தனன். அந்நாட்டு மன்னனொடும் மாந்தரொடும் கேண்மை கொண்டு தன் பண்டங்களைப் பொன்னுக்கு மாற்றிப் பெரும் பொருட்டினன். திங்கள் சில கழிந்தபின் அம் மன்னன் முதலியோரிடத்து விடை பெற்றுக் கொண்டு பொன்னிரம்பிய தன் மரக்கலத்திற் பணி மக்களொடு ஏறி மீண்டனன். இவ்வாறு சீதத்தன் மீண்டு வருங்கால் அவன் மரக்கலம் ஐந்நூறு காவதம் இனிதாக இயங்கியது.

 

   இனி, வெள்ளிமலையிலுள்ள வித்தியாதர வேந்தனாகிய கலுழவேகன் என்பவன் தன் மகள் காந்தருவ தத்தைக்கு இராசமாபுரத்திலேதான் திருமணம் நிகழும் என்பதனை நிமித்திகரால் அறிந்திருந்தான். அக் கலுழவேகன் முன் கூறப்பட்ட சீதத்தன் வாயிலாய் அத் திருமணத்தை நிகழ்த்தக் கருதி அவனைத் தன்பாற் கொணரும் பொருட்டுத் தரன் என்னும் வித்தைவல்ல விச்சாதரனை ஏவினான். அத் தரன் தனது வித்தை வன்மையால் கடலிடையே ஓடிவந்த சீதத்தன் மரக்கலம் காற்றாலும் மழையாலும் கலக்குற்றுக் கடலிலே மூழ்கிவிட்டதுபோல அவனுக்குத் தோன்றும் படி செய்தான். இந் நிகழ்ச்சியால் மரக்கலம் பணி மாந்தர் பொருள் முதலியவற்றை இழந்த சீதத்தன், அம் மரக்கலத்தினின்றும் முறிந்து வீழ்ந்து மிதப்பதாகத் தனக்குத் தோன்றியதொரு மரத்துண்டத்தைப் பற்றிக் கொண்டு அண்மையிலிருந்ததொரு தீவின் கரையை அடைந்து பெரிதும் வருந்தியிருந்தான்.

 

   அப்பொழுது, தரன் அவனைக் கண்டு ”ஐய! யான் மந்திரம் வல்லேன்; நீயிர் இழந்த மரக்கல முதலியவற்றை மீட்டுத்தர வல்லேன். ஆதலால் என்னொடு வருக!” என்று ஆறுதல் கூறி ஒரு யாட்டின் மேலேற்றி வான்வழிப் பறந்து சீதத்தனைக் கலுழ வேகன்பாற் கொணர்ந்து சேர்த்தனன். அக் கலுழவேகனும்