பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 326 

வரும் பகைவரை வென்ற வேலானான சீதத்தனின் ஆணைப்படி நடப்பீராக என்றான்.

 

   (வி - ம்.) 'ஆகி' என்பதற்கு 'ஆய்' என எச்சப்பொருள் கொள்வதும் ஒன்று.

 

   இது கலுழவேகன் காந்தருவதத்தையை வீணாபதியிடம் ஓம்படை செய்தது. உரிமை தோன்ற நின் தடங்கண்ணி என்றான். வேலான் - சீதத்தன். ஆணையிர் - ஆணையையுடையீர்.

( 64 )
557 அருமணி வயிரம் வேய்ந்த
  வருங்கலப் பேழை யைஞ்ஞூ
றெரிமணி செம்பொ னார்ந்த
  விராயிரம் யவனப் பேழை
திருமணிப் பூணி னாற்குச்
  சினந்தலை மழுங்க லின்றிக்
குருமணி முடியிற் றேய்த்த
  தரன்றமர் கொள்க வென்றான்.

   (இ - ள்.) அருமணி வயிரம் வேய்ந்த அருங்கலம் பேழை ஐஞ்ஞூறு - அரிய மணிகளும் வயிரமும் இழைத்த அரிய அணிகலப் பெட்டி ஐந்நூறும்; எரி மணி செம்பொன் ஆர்ந்த யவனப் பேழை இராயிரம் - ஒளிவிடும் மணியும் செம்பொன்னும் நிறைந்த யவன நாட்டுப் பெட்டி இரண்டாயிரமும் (கொடுத்து) திருமணிப் பூணினாற்குச் சினம் தலைமழுங்கல் இன்றிக் குருமணி முடியின் தேய்த்த - அழகிய மணிக்கலன்களையுடைய கலுழவேகற்குப் பகைவர்மேற் சினம் கெடுதல் இல்லாமையால், அவர்களுடைய நிறமிகும் மணிமுடியை அவன் அடியிலே தேய்ப்பித்த; தரன் தமர் கொள்க என்றான் - தரன் சுற்றத்தையும் கொள்க என்று கொடுத்தான்.

 

   (வி - ம்.) யவனப் பேழை - யவன நாட்டிற் செய்த பேழை. பூணினான் - கலுழவேகன். முடியிற் குருமணி என மாறி அவன் அடியில் என வருவித்து முடிக்க.

( 65 )
558 பல்வினைப் பவளப் பாய்காற்
  பசுமணி யிழிகை வம்பார்
நல்லகில் விம்மு கட்டி
  றவிசொடு நிலைக்கண் ணாடி
மெல்லிய தூப முட்டி
  மேதகு நானச் செப்போ
டல்லவுங் கொள்க வென்றா
  னணங்குடை நிணங்கொள் வேலான்.