பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 337 

   (இ - ள்.) கட்டு அவிழ் தாரினான் நாய்கன் - முறுக்குடைந்த மாலையுடைய வணிகன்; கட்டழல் கதிய புண்ணில் கருவரை அருவி ஆரம் பட்டது போன்று - பெருநெருப்புப் பட்ட புண்ணிற் கரிய மலையிலுள்ள அருவியும் சந்தனச் சாந்தும் பட்டாற்போன்று; பரிவு தீர்ந்து - துன்பம் நீங்கி; மட்டு அவிழ் கோதையோடு - தேன் சொரியும் மாலையாள் தத்தையுடன்; இனியர் சூழ - நண்பர்கள் சூழ்ந்துவர; மண்கனை முழவம் மூதூர் - மண்ணுதல் அமைந்த முழவின் ஒலிமிகும் இராசமாபுரத்தே; தன் கடிமனை மகிழ்ந்து புக்கான் - தன்னுடைய காவல் மனையை அடைந்து மகிழ்ந்து புகுந்தான்.

 

   (வி - ம்.) 'கதுவிய' என்பது, 'கதிய' என விகாரமுற்றது.

 

   ஆரம்-சந்தனம். கருவரை என்றது பொதியமலையினை. மண்கனை முழவம்-மார்ச்சனை அமைந்த திரண்ட மத்தளம். மூதூர் - ஈண்டு இராசமாபுரம்.

( 91 )
584 பெருமனை குறுக லோடும்
  பிறையென விலங்கித் தோன்றுந்
திருநுதன் மனைவி செம்பொற்
  கொடியென விறைஞ்சி நிற்ப
வருமுலை பொதிர்ப்ப வாங்கி
  வண்டின மிரியப் புல்லிக்
கதிர்நகை முறுவன் மாதர்
  கண்ணுறு கவலை தீர்த்தான்.

   (இ - ள்.) பெருமனை குறுகலோடும் - தன் பெருமை பெற்ற மனைவியிருக்கும் இடத்தை அடைந்தவுடன்; பிற என இலங்கித் தோன்றும் திருநுதல் மனைவி-பிறை போல விளங்கித் தோன்றும் அழகிய நெற்றியையுடைய அவள்; செம்பொன் கொடி என இறைஞ்சி நிற்ப - செவ்விய பொற்கொடி போல வணங்கி நிற்க; வண்டு இனம் இரிய புல்லி - வண்டுக் கூட்டம் ஓடுமாறு அணைத்து; வருமுலை பொதிர்ப்ப வாங்கி - வளர்முலை புடைகொளத் தழுவி; கதிர் நகை முறுவல் மாதர் - ஒளிரும் பற்களையுடைய பதுமையின்; கண் உறு கவலை தீர்த்தான் - கண்கள் அடைந்திருந்த கவலையைப் போக்கினான்.

 

   (வி - ம்.) கண்களின் ஏக்கமே முதலில் நீங்கும். ஆகையாற் 'கண்ணுறு கவலை' என்றார் 'மாதர்கண்' என்பதற்கு 'மாதரிடம்' என்றும் பொருள் கூறலாம்.

( 92 )