பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 338 

585 சந்திர காந்த மென்னுந்
  தண்மணி நிலத்தி னங்கண்
வெந்தெரி பிசும்பொன் வெள்ளி
  பளிங்கொடு பவளம் பாய்த்திக்
கந்தெரி மணியிற் செய்த
  கன்னியா மாட மெய்திப்
பைந்தொடிப் பாவை யொன்றும்
  பரிவிலள் வைகி னாளே.

   (இ - ள்.) சந்திர காந்தம் என்னும் தண்மணி நிலத்தின் அங்கண் - சந்திர காந்தம் என்னும் குளிர்ந்த மணியாலே செய்த நிலத்தினிடத்தில்; வெந்து எரி பசும்பொன் வெள்ளி பளிங்கொடு பவளம் பாய்த்தி - ஓட வைத்து விளங்கும் புதிய பொன்னாற் சுவர் அமைத்து வெள்ளியும் பளிங்கும் பவளமுங்கொண்டு பாய்ச்சி; எரி மணியில் கந்து செய்த - விளங்கும் மணியால் தூண் அமைத்த; கன்னியா மாடம் எய்தி - கன்னி மாடத்தை அடைந்து; பைந்தொடிப் பாவை ஒன்றும் பரிவு இலள் வைகினாள் - புதிய வளையல் அணிந்த தத்தை சிறிதும் வருத்தம் இல்லாதவளாக இருந்தாள்.

 

   (வி - ம்.) பொன்னாற் சுவரும், மணியால் தூணும், பளிங்கினாற் கையலகும், பவளத்தாற் பூட்டும், வெள்ளியால் கூரையும் கொள்க.

 

   சந்திரகாந்தம் - நிலவொளி பட்டவுடன் நீர் உமிழ்வதொரு மணி. கந்து - தூண். பாவை: காந்தருவதத்தை. பரிவிலள்: முற்றெச்சம்.

( 93 )
586 பாசிழைப் பரவை யல்குற்
  பசுங்கதிர்க் கலாபம் வீங்கக்
காசுகண் பரிய வைகிக்
  கடன்றலைக் கழிந்த பின்னாத்
தூசணி பரவை யல்குற்
  றுளங்குநுண் ணுசுப்பிற் பாவை
யாசறு வரவும் தந்தை
  வலித்தது மறியச் சொன்னான்.

   (இ - ள்.) பாசிழை பரவை அல்குல் பசுங்கதிர்க் கலாபம் வீங்க - பதுமையின் புத்தணி யணிந்த பரப்புடைய அல்குலிலே புத்தொளி வீசும் கலாபம் விம்முதலால்; காசு கண்பரிய வைகி - அதில் மணிகள் அற்று வீழுமாறு கூடியிருந்து; கடன்தலை கழிந்த பின்னா - அவளிடத்து நிகழ்த்து முறையெல்லாம் அங்கே