பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 347 

602 விடுகணை விசையொடு வெருவரு தகையவர்
படுபணை யவருறை பதியது குறுகி
நெடுமதி யகடுற நிழறவழ் கொடியுயர்
கடிநக ரிடிமுர சறைமின மெனவே.

   (இ - ள்.) வெரு வரு தகையவர் விடுகணை விசையொடு - அச்சுறுந் தோற்றத்தினராகிய அவ்வியவர், செலுத்திய அம்பு போன்ற விரைவுடன்; படு பணையவர் உறை பதியது குறுகி - முரசறைவார் உறையும் பதியை அடைந்து; நெடுமதி அகடு உற நிழல்தவழ் கொடி உயர் கடிநகர் - பெரிய திங்களின் வயிற்றிற் பொருந்த ஒளிவிடும் கொடிகள் உயர்ந்த, காவலையுடைய நகரிலே; இடிமுரசு அறைமின் என - இடிபோன்ற முரசினை அறையுங்கள் என்று கூற,

 

   (வி - ம்.) அறைமினம் : அம் : அசை. பதியது : அது : பகுதிப் பொருள் விகுதி.

 

   பணையவர் - முரசறைவோர். (பணை - முரசு)

( 110 )
603 மங்கல வணியினர் மலர்க்கதிர் மதியன
புங்கவ னறநெறி பொலிவொடு மலிகென
வங்கதிர் மணிநகை யலமரு முலைவளர்
கொங்கணி குழலவள் கோடணை அறைவாம்.

   (இ - ள்.) மங்கல அணியினர் - அம் முரசறைவார் மங்கலமாகிய வெள்ளிய அணியணிந்தவராய்; மலர்கதிர் மதி அன புங்கவன் அறநெறி பொலிவொடு மலிக என - மலர்கின்ற ஞாயிறும் திங்களும் போன்ற அருகப்பெருமானுடைய அறநெறி அழகுற உலகெங்கும் நிறைவதாக என்று முதலிற் கூறி; அம் கதிர்மணி நகை அலமரும் வளர் முலை கொங்கு அணி குழலவள் கோடணை அறைவாம் - அழகிய ஒளி மணியும் முத்தும் ஊசலாடும் வளரும் முலைகளையும் மணம் பொருந்திய கூந்தலையும் உடைய தத்தையின் சுயம்வரத்தை அறைந்த முழக்கத்தைக் கூறுவோம்.

 

   (வி - ம்.) நன்மையை அறிவிக்கும் அணி வெள்ளணி. மங்கல அணி அணிந்தே மண முரசறைதல் வழக்கு. (சீவக. 2888) முதலில் அருகனருளை வாழ்த்திப் பிறகு முரசறைகின்றனர். மலிகென அகரம் தொகுத்தல் விகாரம்.

 

   கோடணை அறைவாம் என 'இத்தொடரை முரசறைவார் கூற்றாக்கி, இதன் பின்னர், 'புங்கவன் அறநெறி பொலிவொடு மலிக!' என நிறுத்தி மேல் வரும் முரசறை கூற்றுக்களோடு கூட்டுவர் நச்சினார்க்கினியர். இதற்கு 'மலிகென' என்பதிலுள்ள 'என' என்னும் எச்சத்தை, 'அறைவாம் என' இசைத்துக் கூறும் இம்மொழி மாற்று அத்துணைச் சிறப்பாகு மேற்கொள்க.

( 111 )