பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 351 

   (இ - ள்.) மண் அகம் மடந்தை ஆகம் மார்புஉற முயங்கி நின்ற - நிலமகள் மார்பைத் தன் மார்புறத் தழுவி நின்ற; அண்ணலை ஆதி ஆக அருங்கடி நகரை வாழ்த்தி - கட்டியங்காரனை முதலாக வைத்து அரிய காவலையுடைய நகரத்தை வாழ்த்தி; விண் அகம் முழக்கின் ஏய்ப்ப வீதிதொறும் எருக்கி - முகிலின் முழக்கைப்போலத் தெருத்தொறும் (மேற் கூறியவாறு கூறி) தாக்கி; எங்கும் கண் ஒளிர் கடிப்பின் ஓச்சிக் கடிமுரசு அறைந்த காலை - எங்கும் (முரசின்) கண்ணுற ஒளிசெயும் குறுந்தடியாலே வீசி மணமுரசை அடித்தபோது.

 

   (வி - ம்.) முரசறைவோன் முதலில் அருகன் அருளை வாழ்த்திப் பிறகு கட்டியங்காரனையும் நகரையும் வாழ்த்தி முற்கூறியவாறு முரசறைந்தான் என்று கொள்க.1.

 

   அண்ணல் : கட்டியங்காரன். அண்ணல் ”மண்ணக மடந்தை தன் மார்பைப் பொருந்தாளாகவும் வஞ்சனையாலே அவள் தன் மார்பைப் பொருந்துமாறு முயங்கி நின்ற அண்ணல்” எனவும் ஒரு பொருள் தோற்றுதல் காண்க. அரசனை வாழ்த்துதல் முரசறைவோர் வழக்கம். இதனைப் பெருங் கதையில் வாசவதத்தையின் திருமணம் அறிவிக்கும் வள்ளுவன்,

 
  ”பொலிக வேல்வலம் புணர்க பூமகள்  
  மலிக மண்மகள் மன்னுக மன்னவன்”  

   எனத் தொடங்கி முரசறைதலானும் உணர்க. எருக்கி - தாக்கி. கண் - முரசின் கண். கடிப்பு - குறுந்தடி.,

( 117 )
610 வணக்கருந் தானை மன்னர்
  மத்தகம் பிளந்து வாய்த்த
நிணக்கொழுங் குருதி வாட்கை
  நிலம்புடை பெயர்க்கு மாற்ற
லணைப்பருங் களிகொள் வேழத்
  தத்தின புரத்து வேந்தன்
கணைக்கவி னழித்த வுண்கட்
  கன்னியைக் கருதி வந்தான்.

   (இ - ள்.) வணக்க அருந்தானை மன்னர் மத்தகம் பிளந்து - வணங்காத வேந்தரின் யானை மத்தகத்தைப் பிளந்து; வாய்த்த

 

1. ” இசைபட அறைந்த ஓசை எண்டிசை வேந்து மல்லால்

 

விசையுடை யெவரும் ஈண்டி வெறுநிலம் நெளியத் தோற்றிப்

 

பசைபடு மாறு வந்தார் பான்மையும் பண்பும் எல்லாம்

 

நசைபட நல்ல நாட்டி நாஞ்சிறி துரைத்து மன்றே”

 

இச் செய்யுள் சில ஏட்டுப் பிரதிகளிற் காணப்படுகிறது (609) க்குப் பின்.