பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 360 

   (இ - ள்.) வெண்ணிற மழையின் மின்போல் - வெண்முகிலிடை மின்னுப்போல; வெண்துகில் கலாபம் வீக்கி - வெண்ணிற ஆடையினுள்ளே கலாபத்தை இறுக்கி; கண் நிறம் முலையும் தோளும் சந்தனத் தேய்வை கொட்டி - கண்ணையும் நிறத்தையும் உடைய முலையினும் தோளினும் சந்தனக் குழம்பைப் பூசி; தௌ் நிறச் சிலம்பு செம்பொன் கிண்கிணி பாதஞ் சேர்த்தி - தெளிந்த நிறமுடைய சிலம்பையும் பொன்னாலான கிண்கிணியையும் அடியில் அணிந்து; பண் நிறச் சுரும்பு சூழும் பனிமுல்லைச் சூட்டு வேய்ந்தார் - பண்ணையும் நிறத்தையும் உடைய வண்டுகள் சூழும் முல்லைச் சூட்டினைக் கற்பிற்குச் சான்றாகத் தலையிலே சூட்டினார்.

 

   (வி - ம்.) குலமகளிர் தங் கற்பொழுக்கத்திற் கறிகுறியாக முல்லை மலர் சூடுதல் ஒரு தமிழ் மரபு. இதனை, ”முல்லைசான்ற கற்பின்” (சிறுபாண். 30) என்றும், ”வாணுதலரிவை முல்லைமலைய” (ஐங். 408) என்றும், ”முடிசூட்டுமுல்லையோ முதற்கற்பு முல்லையோ” (தக்கயா. 119) என்றும், ”முல்லையந்தொடை அருந்ததி” (பிரபுலிங் - கைலாய. 27) என்றும், ”வண்முல்லை சூடுவ தேநலங் காண்குல மாதருக்கே” (குலோத்துங்க சோழன் கோவை. 168) என்றும் பிற சான்றோர் கூறுமாற்றானும் உணர்க. இனித் தேவரே, ”முல்லைச்சூட்டு மிலைச்சி” (2438) என மேலுங் கூறுவர்.

( 132 )
625 எரிமணிச் சுண்ண மின்னு
  மிருஞ்சிலை முத்தஞ் சோ்த்தித்
திருமணி முலையி னெற்றிச்
  சிறுபுறஞ் செறியத் தீட்டிப்
புரிமணி யாகத் தைதா
  விரனுதி கொண்டு பூசி
விரிமணி வியப்ப மேனி
  யொளிவிட்டு விளங்கிற் றன்றே.

   (இ - ள்.) மின்னும் இருஞ்சிலை முத்தம் திருமணி முலையின் நெற்றிச் சேர்த்தி - ஒளிவிடும் பெரிய வானவிற்போலும் முத்துவடத்தை அழகிய மணியணிந்த முலையின் நெற்றியிலே பூட்டி; எரிமணிச் சுண்ணம் சிறு புறம் செறியத் தீட்டி - ஒளிரும் மணிச் சுண்ணத்தை முதுகிலே பொருந்தத் தீட்டி; புரிமணி ஆகத்து ஐதா விரல்நுதி கொண்டு பூசி - அதனையே முத்துவடமும் மணிவடமும் அணிந்த மார்பினும் மென்மையாக விரல் நுனியைக் கொண்டு பூச; விரிமணி வியப்ப மேனி ஒளிவிட்டு விளங்கிற்று - விரிந்த ஒளியுறு மாணிக்க மணியும் வியக்குமாறு மேனி ஒளி வீசி விளங்கியது.