பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 386 

667 ஐயனுக் கமைந்த நீரா
  ரறுபத்து நால்வ ரம்பொன்
வையகத் தமிர்த மன்னார்
  வாக்கமை பாவை யொப்பா
ரெய்திய விளமை மிக்கா
  ரியைந்தன ரென்று பின்னுங்
கையமை சிலையி னாற்குக்
  கந்துக னிதுவுங் கூறும்.

   (இ - ள்.) அம்பொன் வையகத்து அமிர்தம் அன்னார் - (இன்பத்தால) பொன்னுலகத்து அமிர்தம் போன்றவராய்; எய்திய இளமை மிக்கார் - பொருந்திய இளமை நீங்காதவராய்; வாக்கு அமை பாவை ஒப்பார் - திருத்தமாக அமைந்த கொல்லிப்பாவை போன்றாராய்; அமைந்த நீரார் அறுபத்து நால்வர் - தக்க இயல்பினார் அறுபத்து நால்வர்; ஐயனுக்கு இயைந்தனர் என்று - நம் ஐயனுக்கு முன்னரே இயைந்தனர் (ஆதலால் யாழ் வாசிக்கச் செல்லக் குறைவில்லை) என்றுரைத்து; பின்னும் கந்துகன் கையமை சிலையினாற்கு - மற்றும் கந்துகன், கையிற் பொருந்திய வில்லினானுக்கு; இதுவும் கூறும் - (மிகுதிப்பாடாக உலகங்கூறும் இதனாற் சிறிது குறையுண்டு என்று) இதனையும் புத்திசேனனிடம் கூறுவான்.

 

   (வி - ம்.) சிலையினான் : சீவகன்.

 

   ”அறுபத்து நால்வர் என்றது கலைகளை” என்றும், ”இதுவும் கூறும் - இவன் மிகுதிப்பாடு கூறும்; உம்மை, சிறப்பு, மிகுதியாவது உலகம் ஏந்துதலானும், கல்லேந்தி நீக்குதலானும் (690) நீரைமீட்டலானும் உளதாய மிகுதி.இதற்குக் கட்டியங்காரன் பொறாததே குறையென்றான். இது மேலே 'விலங்கல்' (689) என்னும் கவி முதலியவற்றாற் காண்க”. என்றும் நச்சினார்க்கினியர் வரைந்துள்ளார்.

( 175 )
668 மறைவல்லாற் குரைக்கும் போழ்திற்
  கோயிலு ணின்று மாலைப்
பிறைவெல்லும் நுதலி னாளோர்
  பெண்கொடி வந்து கூந்த
லுறைசெல நீக்கிப் பைந்தா
  ளொண்மணிக் குவளை நீட்ட
நறைவெல்லும் நாக மாலை
  நோக்கொடு பூக்கொண் டானே.