பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 387 

   (இ - ள்.) மறைவல்லாற்கு உரைக்கும் போழ்தில் - (மிகுதிப் பாடாகிய அதனை) புத்திசேனனுக்குக் கூறத்தொடங்கும் பொழுது; மாலைப் பிறைவெல்லும் நுதலினாள் ஓர் பெண்கொடி கோயிலுள் நன்று வந்து - மாலைப் பிறையை வெல்லும் நெற்றியினாளாகிய கொடி போன்ற ஒரு பெண் அரண்மனையினிற்றும் வந்து; கூந்தல் உறைசெல நீக்கி - கூந்தலாகிய உறையினை அகல நீக்கி; பைந்தாள் ஒண்மணிக் குவளை நீட்ட - பசுமையான தாளையுடைய ஒளி பொருந்திய மணிபோலும் குவளையை நீட்ட; நறை வெல்லும் நாகமாலை நேர்க்கோடு பூக்கொண்டான் - மணத்தின் வெல்லு மியல்புடைய நாகமாலையின் குறிப்பாலே (ஒரு காரியம் உண்டென உணர்ந்து) அக் குவளையைக் கையிலே கொண்டான்.

 

   (வி - ம்.) மாலை யென்பதற்கேற்ப நறை கூறினார். இஃது இயற்கையடை.

( 176 )
669 நல்லவ ணோக்க நாய்கன்
  றோ்ந்துபூங் குவளைப் போதி
னல்லியுட் கிடந்த வோலை
  தாளது சலாகை யாதல்
சொல்லுமென் றாய்ந்து கொண்டு
  துகிலிகைக் கணக்கு நோக்கி
வல்லிதிற் சலாகை சுற்றி
  யோலையை வாசிக் கின்றான்.

   (இ - ள்.) நாய்கள் நல்லவள் நோக்கம் தேர்ந்து - (பூவை வாங்கின) வணிகன் நாகமாலையின் குறிப்பை ஆராய்ந்து தெளிந்து கொண்டு; பூங்குவளைப் போதின் தாளது அல்லியுள் கிடந்த ஓலை சலாகையாதல் சொல்லும் என்று - அழகிய குவளைமலரின் தாளே தன் அகவிதழிற் கிடந்த ஓலையைச் சுற்றிப் படிக்கச் சலாகையாதலைக் கூறுகின்றதென்று; ஆய்ந்து கொண்டு - ஆராய்ந்து கொண்டு; துகிலிகைக் கணக்கு நோக்கி - துகிலிகைக் கணக்கால் எழுதின எழுத்தைப் பார்த்து; சலாகை வல்லிதின் சுற்றி - (தாளாகிய) சலாகையிலே வரி ஏற்றிழிவு படாதவாறு சுற்றி; ஓலையை வாசிக்கின்றான் - ஓலையை வாசிக்கத் தொடங்கினான்.

 

   (வி - ம்.) சலாகை - இரும்புக் கம்பி.

 

   நல்லவள் - ஈண்டு நாகமாலை. அல்லி - அகவிதழ். துகிலிகை - எழுதுகோல்.

( 177 )