பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 412 

   (வி - ம்.) நிருமிதம் - படைப்பு. 'இவன்' என்பதை அடுத்த செய்யுளில் உள்ள 'மார்பம்' என்பதன்முன் சேர்ப்பர் நச்சினார்க்கினியர். நிருமிதம் மகன் - மகரம் விரித்தல் விகாரம்.

( 215 )
708 பொன்னை விட்ட சாயலாள் புணர்மு லைத்த டத்தினான்
மின்னை விட்டி லங்குபூண் விரைசெய் மார்ப மோலையா
வென்னை பட்ட வாறரோ வெழுதி நங்கை யாட்கொள்வான்
மன்னும் வந்து பட்டனன் மணிசெய் வீணை வாரியே.

   (இ - ள்.) மின்னை விட்டு இலங்கு பூண் விரைசெய் மார்பம் ஓலைஆ - ஒளிவிட்டு விளங்கும் பூண்களையுடைய இவனுடைய மணமிகும் மார்பை ஓலையாகக் கொண்டு; பொன்னை விட்ட சாயலாள் நங்கை புணர்முலைத் தடத்தினால் - திருவையும் வென்ற மென்மையாளாகிய தத்தை தன் இரு முலைகளினாலே; எழுதி ஆட்கொள்வான் - எழுதி அடிமை கொள்ளுமாறு; மணி செய் வீணை வாரியே மன்னும் வந்து பட்டனன் - மணிகள் அழுத்திச் செய்யப்பட்ட யாழினால் ஆக்கிய வாரியிலே தப்பாமல் வந்து அகப்பட்டான்; பட்டஆறு என்னை? - நல்வினை உண்டான வகை தான் என்னே?

 

   (வி - ம்.) 'நல்வினை' என வருவிக்க. வாரி - யானையைப் பிடிக்கும் இடம். மன்னும் - தப்பாமல் என்றுமாம்.

( 216 )
709 இனைய கூறி மற்றவ டோழி மாரு மின்புற
வனைய லாம்ப டித்தலா வடிவிற் கெல்லை யாகிய
கனைவண் டோதி கைதொழுஉங் கடவுள் கண்ணிற் கண்டவ
ரெனைய தெனைய தெய்தினார் அனைய தனைய தாயினார்.

   (இ - ள்.) இனைய கூறி அவள் தோழிமாரும் இன்புஉற - இத்தன்மைய ஆகிய மொழிகளைக் கூறி அவள் தோழியரும் இன்பம் உற்றிருக்க; வனையலாம் படித்து அலா வடிவிற்கு எல்லை ஆகிய - எழுதலாம் தன்மையுடையது அல்லாத அழகிற்குச் சான்றாகிய; கனை வண்டு ஓதி - ஒலிக்கும் வண்டுகள் நிறைந்த கூந்தலாளாகிய தத்தை; கை தொழுஉம் கடவுள் - கைகூப்பி வணங்கும் காமனை; கண்ணின் கண்டவர் எனையது எனையது எய்தினார் - கண்ணாற் பார்த்தவர் எவ்வளவு எவ்வளவு இன்பம் அடைந்தனரோ; அனையது அனையது ஆயினார் - அவ்வளவு அவ்வளவாகிய இன்ப நிலையை மற்றோரும் அடைந்தனர்.

 

   (வி - ம்.) 'மற்றோரும்' என வருவிக்க.

 

   வனையலாம் படித்தலாவடிவு - இயற்றுதற்கியலாத தன்மையையுடைய அழகு என்றவாறு கனைவண்டு - இசைபாடும் வண்டு. எனையது - எவ்வளவு; அனையது - அவ்வளவு.

( 217 )