பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 417 

இது 1.கையாறு என்னும் மெய்ப்பாடு. 'மெல்ல வழுக்கி' என்பது பாடமாயின், 'அவ்விடத்து நீங்கி' என்க.

 

   நச்சினார்க்கினியர் 710 - முதல், 715 - வரை உள்ள ஆறு செய்யுட்களையும் ஒரு தொடராக்கிச் சொற்களைக் கொண்டு கூட்டிக் கூறும் முடிபு : -

 

   மிக்க அழகுடைய கண்ணாள், இன்பத்தோடு ஒப்பாள், அவள், 'வேலான், வனப்புடைய நம்பி, என்னிதிற் படுத்த ஏந்தல், இவன் ஆராய்ந்தால் யாவனாங் கொல்' என ஐயுற்று, 'யாவனே யானும் ஆக; நமது ஞானக்கண்ணிடத்தான் : அதனால், யான் நோக்கினவிடத்துக் கையகப்பட்டேயிருந்தான்; அங்ஙனமிருந்து கடைந்திடுகின்ற காளையது மார்பு இயைவது என்றாவது கொல்லோ'. என்று ஐயுற்று நோக்கி, அக்காலம் சிறிது நீட்டித்தலின், அதற்கு ஆற்றாது, சிறையைக் கைபோய், நாண் வேலியைப் பாய்ந்து காமத் தீ எரிய நின்றாள்; அப்போது எரியுறு மெழுகின் நின்றாள், அங்ஙனம் நின்று மாழ்கி விழித்து உயிர்த்து நடுங்கிமெல்லத் தோழி மேலே விழுந்து அவளைப்புல்லி, அங்ஙனம் கையாறுற்ற விடத்துத் தன் மனத்து நின்ற தலைவனை நோக்கி, 'நீக்கி, மாடம் புகுந்து, யான் நோம்படி என்னுள்ளத்தைப் பிணித்தாய்; நின்னையும் பிணிப்பேன்; சிறிது பொழுது கழிக' என்றாள்; பின்பு தன் நெஞ்சினை நோக்கி, 'நெஞ்சே! நலன் உண்ணப்பட்ட நம்பி ஈயின்றி யிருந்த தீந்தேனாதலால், மகளிர் முன்னே புலம்பா தொழிக' என்று ஆற்றுவித்துத் தேற்றிப் பின்பு தோழியை நோக்கி, 'இனிய யாழிது உய்த்துக்கொடுமோ' என்றாள்.

( 223 )

வேறு

 
716 தடங்க ணாள்ப ணியினாற்
  றானவ் வீணை யொன்றினை
நெடுங்க ணாளெ ழினியை
  நீக்கி யுய்த்து நீட்டினாள்
மடங்க லன்ன மொய்ம்பினான்
  வருக வென்று கொண்டுதன்
கிடந்த ஞானத் தெல்லையைக்
  கிளக்க லுற்று நோக்கினான்.

   (இ - ள்.) தடங்கணாள் பணியினால் அவ்வீணை ஒன்றினை உய்த்து - தத்தையின் ஆணைப்படி அவ்வீணைகளில் ஒன்றை ஆராய்ந்து; எழினியை நீக்கி - உறையை விலக்கி; நெடுங்கணாள் தான் நீட்டினாள் - வீணாபதி கொடுத்தாள்; மடங்கல் அன்ன மொய்ம்பினான் - சிங்கமனைய ஆற்றலான்; மடங்கல் அன்ன மொய்ம்பினான் - சிங்கமனைய ஆற்றலான்; வருக என்று கொண்டு - கொணர்க என்று வாங்கி; தன் கிடந்த ஞானத்து எல்லையை - தன் பரவிய அறிவின் எல்லையினால்; கிளக்கல் உற்று நோக்கினான் - அறிவிக்க வேண்டி ஆராய்ந்தான்.

 

1. கையாறு : உயிர்ப்பும் இன்றி வினையொழிந்தயர்தல்.

 
716 தடங்க ணாள்ப ணியினாற்
  றானவ் வீணை யொன்றினை
நெடுங்க ணாளெ ழினியை
  நீக்கி யுய்த்து நீட்டினாள்
மடங்க லன்ன மொய்ம்பினான்
  வருக வென்று கொண்டுதன்
கிடந்த ஞானத் தெல்லையைக்
  கிளக்க லுற்று நோக்கினான்.