பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 420 

   (வி - ம்.) நலமாவன : ”சொல்லிய கொன்றை கருங்காலி மென்முருக்கு - நல்ல குமிழும் தணக்குடனே - மெல்லியலாய் - உத்தம மான மரங்க ளிவையென்றார் - வித்தக யாழோர் விதி” ”தளமாய்ச் சம நிலத்துத் தண்காற்று நான்கும் - உளதாய் ஒருங்கூனம் இன்றி - அளவு - முதிரா திளகாது மூன்றாங்கூ றாய - அதுவாகில் வீணைத்தண் டாம்.” ”கோடே பத்தர் ஆணி நரம்பே - மாடக மெனவரும் வகையின வாகும்” ”பதுமம் கழல்குடந் தாடியொ டுள்ளிபண் பூண்டுநின்ற - விதியமர் தண்டு குடையே குடுமிமெய்க் கோட் டுறுப்பு - மதியமர் போதிகை புட்டில் முகஞ்சுவர் மன்னெருத்தம் - விதியமர் பத்தர்க் குறுப்பென் றுரைத்தனர் மின்னிடையே” என இவையும் பிறவும்.

( 227 )

வேறு

 
720 இருநில மடந்தை யீன்ற
  திருவிசும் பென்னுங் கைத்தாய்
திருநல மின்னுப் பொன்ஞாண்
  முகில்முலை மாரித் தீம்பா
லொருநலங் கவினி யூட்ட
  வுண்டுநோய் நான்கு நீங்கி
யருநலங் கவினி வாள்வா
  யரிந்திது வந்த தென்றான்.

   (இ - ள்.) இருநில மடந்தை ஈன்றது - மண்மகள் பெற்றது இம்மரம்; இரு விசும்பு என்னும் கைத்தாய் - பெருவான் என்னும் செவிலித்தாய்; திருநலம் மின்னுப் பொன் ஞாண் முகில் முலை மாரித் தீம்பால் - அழகிய நலமாகிய மின்னாகிய பொன் நாணினையுடைய முகிலாகிய முலையின் மழையாகிய இனிய பாலை; ஒரு நலம் கவினி ஊட்ட - முழுவலன்போடே அழகுற ஊட்ட; உண்டு நோய் நான்கும் நீங்கி - பருகி நான்கு நோயையும் நீங்கி; அருநலம் கவினி - அழகிய நலன் கவினுற்று வளர்ந்து; வாள்வாய் அரிந்து வந்தது இது என்றான் - வாளாலே அரிந்து கொண்டுவரப் பெற்றது இவ்யாழ் என்று சீவகன் செப்பினான்.

 

   (வி - ம்.) ஈன்றது : சினைவினை முதலொடு முடிந்தது. நற்றாய் அன்பு செவிலிக்குப் பிறந்து வளர்த்தமை தோன்ற 'ஒரு நலம்' என்றார். நான்காவன : வெயில், காற்று, நீர், நிழல் மிகுதல்.

( 228 )
721 தீந்தொடை நரம்பின் றீமை
  சிறிதலாப் பொழுது மோதிப்
பூந்தொடை யரிவை காணப்
  புரிஞெகிழ்த் துரோமங் காட்டத்