பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 441 

755 எம்மைநீர் வெல்லப் பெற்றீர்
  வென்றபி னிருந்த வேந்த
னும்மையும் வேறு செய்து
  நும்முளே பொருது வீந்தால்
வெம்மைசெய் துலக மெல்லா
  மாண்டிட விளைக்கும் நீதி
யம்மமற் றதனை யோரீ
  ரவன்கருத் தன்ன தென்றான்.

   (இ - ள்.) எம்மை நீர் வெல்லப் பெற்றீர் - எம்மை நீர் ஒருவாற்றான் வென்றீரெனின்; வென்றபின் இருந்த வேந்தன் நும்மையும் வேறு செய்து - வென்ற பிறகு இங்கிருந்த கட்டியங்காரன் உங்களையும் வேறு படுத்தி; நும் முளே பொருது வீந்தால் - உங்களிடையே பொருது வீழ்ந்தீராயின்; உலகம் எல்லாம் வெம்மை செய்து ஆண்டிட நீதி விளைக்கும் - உலகத்தை எல்லாம் கொடுமை செய்து ஆள ஒரு முறைமையை உண்டாககுவான்; அதனை ஓரீர் - அந்த எண்ணத்தை நீவிர் அறியீர்!; அவன் கருத்து அன்னது என்றான் - கட்டியங்காரன் கருத்து எப்போதும் அத்தகையதே என்றான்.

 

   (வி - ம்.) அம்ம, மற்று: அசைநிலைகள். அரசர் உலகினைக் கட்டியங்காரன் கொள்ளாமல் அவரே பெறுமாறு கூறினதால் இச்செய்யுள் தானம்.

( 263 )
756 சொற்றிற லன்றி மன்னீர்
  தொக்குநீர் காண்மி னெங்கள்
விற்றிற லென்று வில்வாய்
  வெங்கணை தொடுத்து வாங்கிக்
கற்றிரள் கழிந்து மண்ணுட்
  கரந்தது குளிப்ப வெய்திட்
டிற்றெமர் கல்வி யென்றா
  னிடியுரு மேற்றொ டொப்பான்.

   (இ - ள்.) மன்னீர்!; - அரசர்களே!; எங்கள் சொல் திறல் அன்றி - எங்கள் சொல் வன்மையன்றி; வில்திறல் நீர் தொக்குக் காண்மின் என்று - வில்வன்மையையும் நீவிர் திரண்டிருந்து காண்பீராக என்றுரைத்து; இடி உரும் ஏற்றொடு ஒப்பான் - இடிக்கும் இடியேறு போன்ற பதுமுகன்; வில்வாய் வெங்கணை தொடுத்து வாங்கி - வில்லிலே கொடுங்கணை ஒன்றைப் பூட்டி இழுத்து; அது கல் திரள் கழிந்து மண்ணுள் கரந்து குளிப்ப