பக்கம் எண் :

                         
குணமாலையார் இலம்பகம் 513 

   (வி - ம்.) ‘இவை நல்ல‘ எனக் குணமாலையின் சுண்ணத்தைக் கூறினான். அவர்கள், இரண்டையும் ந்லல எனக் கூறுகிறான் என்றெண்ணினர். பலவுங் கூட்டி இடித்தலின் ‘இவை‘ எனச் சுண்ணத்தைச் கூறுகிறார்.

( 34 )
885 மற்றிம் மாநகர் மாந்தர்கள் யாவரு
முற்று நாயியுங் கண்டு முணர்ந்திவை
பொற்ற சுண்ண மெனப்புகழ்ந் தார்நம்பி
கற்ற தும்மவர் தங்களொ டேகொலோ.

   (இ - ள்.) இம் மாநகர் மாந்தர்கள் யாவரும் - இப்பெருநகரில் உள்ள மக்கள் எல்லோரும்; உற்றும் நாறியும் கண்டும் உணர்ந்து - தொட்டும் மோந்தும் பார்த்தும் ஆராய்ந்து; இவை பொற்ற சுண்ணம் எனப் புகழ்ந்தார் - (வேறுபாடு கூறாமல்) இவை நல்ல சுண்ணப் பொடி என்று புகழ்ந்தனர்; நம்பி! கற்றதும் அவர் தங்களொடே கொல்?- நம்பியே! நீ கற்றதும் அவர்களுடனேயோ?

 

   (வி - ம்.) உற்றும், என்றது கையாற்றொட்டுப் பார்த்தும் என்றவாறு. நாறியும் என்றது, மூக்கான் முகந்து பார்த்தும் என்றவாறு. பொற்றசுண்ணம் - பொலிவுடைய பொடி. நம்பி கற்றதும் அவர் தங்களொடே கொலோ என்றது, சீவகனை் அம்மகளிர் அசதியாடியபடியாம். நீ நன்கு இதனை ஆராய்ந்து பாராமல் கூறுகின்றனை என்பது கருத்து.

( 35 )
886 ஐய னேயறி யும்மென வந்தனம்
பொய்ய தன்றிப் புலமை நுணுக்கிநீ
நொய்திற் றோ்ந்துரை நூற்கட லென்றுதங்
கையி னாற்றொழு தார்கமழ் கோதையார்.

   (இ - ள்.) ஐயனே அறியும் என வந்தனம் - சீவகனே அறிவான் என்று பிறர்கூறக் கேட்டு நின்னிடம் வந்தோம்; நூற்கடல் ! அது பொய் அன்றிப் புலமை நுணுக்கி - நூற் கடலே! அது பொய் ஆகாமற் புலமையானே நுண்ணியதாக ஆராய்ந்து; நொய்தின் தேர்ந்து நீ உரை என்று - விரைந்து தெரிந்து நீ கூறுக என்று; கமழ் கோதையார் தம் கையினால் தொழுதார் - மணக்கும் மலர்மாலையார் தம் கையினாலே தொழுதனர்.

 

   (வி - ம்.) புலமை - நுண்மாணுழைபுலம். நுணுக்குதலாவது. அதனைப் பின்னும் கூரிதாக்கி ஆராய்ந்தல். நொய்தின் - விரைவின். நூற்கடல: அன்மொழித்தொகை ஈண்டு விளியாக நின்றது.

( 36 )
887 நல்ல சுண்ண மிவையிவற் றிற்சிறி
தல்ல சுண்ண மதற்கென்னை யென்றிரேற்
புல்லு கோடைய பொற்புடைப் பூஞ்சுண்ண
மல்ல சீதஞ்செய் காலத்தி னாயவே.