பக்கம் எண் :

குணமாலையார் இலம்பகம் 529 

   (இ - ள்.) விடாக் களிவண்டு உண - விடாமல், களிப்பையுடைய வண்டுகள் உண்ணுமாறு; விரிந்த கோதையர் படாக்களி இளமுலை பாய - மலர்ந்த மலர்மாலையரின் சாயாத களிப்பை யூட்டும் இளமுலைகள் பாய்தலால்; விண்ட தார்க்கடாக் களிற்று ஏறுழ்வலிக் காளை - அலர்ந்த தாரணிந்த, மதயானை போன்ற மிக்க வலிபடைத்த காளையாகிய; சீவகன் - சீவகன் ; அடாக் களியவர் தொழில் காண ஏகினான் - ஒழுக்கக் கேடுபண்ணாத களிப்பையுடையார் விளையாட்டைக் காணச் சென்றான்.

 

   (வி - ம்.) நச்சினார்க்கினியர் ‘காளை‘என்பது நந்தட்டனை உணர்த்துவதாகக் கூறிச் சீவகன் அடாக்களியவர் தொழில் காணுமாறு, நந்தட்டன் அங்கிருந்து போயினான் என்று பொருள் கூறுவர். அவர் மேலும் கூறுவதாவது:

 

   சுண்ணந் தேற்றுகின்ற காலத்திருந்த நந்தட்டன், சீவகன் நீர் விளையாட்டின் வினோதங் காணப்போதற்குத் தானும் தனக்குக் கூடுமவர்களுமாக வேறு போயினான் என்றவாறு. இவன் போகவே, வினோதத்திற்குக் கூடும் புத்திசேனனும் ஒழிந்தோரும் சீவகனைக் கூடினாராம்.

 

   இவ்வாறு நச்சினார்க்கினியர் கூறுவதற்குக் காரணம் நீர் விளையாட்டணியைச் சென்று காணுதல் சீவகனுக்குத் தகவன்று என்று கருதியதாதல் வேண்டும்.

 

   இனி, ‘இவை யின்னனவும் பிறவும‘ என்ற (சீவக. 933) செய்யுள் வரை நீர் விளையாட்டணி காணுதல் கூறப்படும்.

( 66 )

917 ஒன்றே யுயிரை யுடையீ
  ரொருவிப் போமி னிவள்க
ணன்றே கூற்ற மாகி
  யருளா தாவி போழ்வ
தென்றே கலையுஞ் சிலம்பு
  மிரங்க வினவண் டர்ப்பப்
பொன்றோய் கொடியி னடந்து
  புனல்சேர் பவளைக் காண்மின்.

   (இ - ள்.) இவள்கண் அன்றே கூற்றம் ஆகி அருளாது ஆவி போழ்வது? -இவள் கண்ணல்லவோ காலனாகி இரக்கம் இன்றி உயிரைப் போக்குகின்றது?; ஒன்றே உயிரை உடையீர்! ஒருவிப் போமின் - (ஆதலால்), சேமவுயிரின்றி ஓருயிரே உடையீர் நீங்கிப் போவீராக, என்றே கலையும் சிலம்பும் இரங்க - என்று கூறுவன போலவே மேகலையும் சிலம்பும் ஒலிக்க; இன வண்டு ஆர்ப்ப - கூட்டமாகிய வண்டுகள் ஆரவாரிக்க; பொன்தோய் கொடியின் நடந்து - பொன்னுலகிற் பொருந்திய காமவல்லி போல நடந்து சென்று; புனல் சேர்பவளைக் காண்மின்! - நீரில் இறங்குகின்றவளைக் காண்மின்!