பக்கம் எண் :

                             
குணமாலையார் இலம்பகம் 581 

   (வி - ம்.) மாலையைக்கொண்ட பூஞ்சிகைக்குப் பூங்கொடியின் மேல் குனிந்திருந்த குயில் உவமை.

( 161 )
1012 சிலம்பொடு மேகலை மிழற்றத் தேனினம்
அலங்கலுண் டியாழ்செயும் அம்பொன் பூங்கெடி
நலம்பட நன்னடை கற்ற தொக்குமிவ்
விலங்கரித் தடங்கணாள் யாவள் ஆங்கொலோ.

   (இ - ள்.) தேன் இனம் அலங்கல் உண்டு யாழ்செயும் அம்பொன் பூங்கொடி - வண்டுகளின் இனம் மாலையில் தேனைப் பருகி யாழென முரலும் அழகிய பொன்னாலான பூங்கொடி ஒன்று; சிலம்பொடு மேகலை மிழற்ற - சிலம்பும் மேகலையும் ஒலிக்க; நலம்பட நல்நடை கற்றது ஒக்கும் - நலம்பெற நல்ல நடையைக் கற்றது போன்ற; இவ் இலங்கு அரித்தடங்கணாள் யாவள்? - இந்த விளங்கும் செவ்வரி பரந்த பெருங்கண்ணாள் யாவளோ?

 

   (வி - ம்.) இல்பொருளுவமை.

 

   மிழற்ற - ஒலிப்ப. தேனினம் - வண்டினம். அலங்கல்: ஆகுபெயர்; தேன் என்க. யாழ் - இசைக்கு ஆகுபெயர்.

( 162 )
1013 யாவளே ஆயினும் ஆக மற்றிவள்
மேவிய பொருளொடு மீண்ட பின்னலால்
ஏவலாற் சோ்கலேன் என்று பைங்கிளி
பூவலர் சண்பகம் பொருந்திற் றென்பவே.

   (இ - ள்.) யாவளே ஆயினும் ஆக - (இவள்) எவளாக இருப்பினும் இருக்க; இவள் மேவிய பொருளொடு மீண்டபின் அலால் - இவள் தான் விரும்பியது முடிந்து திரும்பின பின்னர் அன்றி; ஏவலால் சேர்கலேன் என்று - குணமாலையின் ஏவலாற் செல்லக் கடவன் அல்லேன் என்றுன்னி; பைங்கிளி பூ அலர் சண்பகம் பொருந்திற்று - அப் பச்சைக்கிளி மலர்ந்த சண்பகத்தைச் சார்ந்து தங்கியது.

 

   (வி - ம்.) ஏவலான் - ஏவில் வல்லவன்( சீவகன்) எனினும் ஆம்.

 

   இவள் என்றது காந்தருவதத்தையை. மேவிய பொருள் - தான் விரும்பிவந்த செயல். சேர்கலேன்: தன்மை ஒருமை எதிர்மறை வினைமுற்று.

( 163 )
1014 மதுக்களி நெடுங்கணாள் வான்பொற் கிண்கிணி
யொதுக்கிடை மிழற்றச்சென் றெய்தி யூன்கவர்
கதக்களி வேலினாற் கண்டு காமநீர்ப்
புதுத்தளி ரனையவள் புலந்து நோக்கினாள்.