பக்கம் எண் :

                           
குணமாலையார் இலம்பகம் 585 

பகை மலர்ப் பாதம் சேர்ந்தது - சீவகனுடைய தண்ணிய நிலவின் பகையான தாமரை மலரனைய அடிகளை வணங்கியது.

 

   (வி - ம்.) அளைஇ: சொல்லிசை அளபெடை.

 

   துனிப்பு - வெறுப்பு. துணைவி : காந்தருவதத்தை. ஈங்குப் பிறர்க்கிடமிலை என மாறுக. கனிப்பு - இனிமை. பனிக்கதிர்ப்பகை - தாமரை மலர்.

( 170 )
1021 வாழ்கநின் கழலடி மைந்த வென்னவே
தோழியர் சுவாகதம் போது கீங்கெனச்
சூழ்மணி மோதிரஞ் சுடர்ந்து வில்லிட
யாழறி வித்தக னங்கை நீட்டினான்.

   (இ - ள்.) மைந்த ! நின் கழலடி வாழ்க என்ன - மைந்தனே ! நின் கழலணிந்த அடி வாழ்வதாக! என்று வணங்கிய கிளி வாழ்த்த ; யாழ் அறி வித்தகன் - யாழ் உணர்ந்த திறலோன்; தோழியர் சுவாகதம் போதுக ஈங்கு என - எம் தோழியரின் நல்வரவே! இங்கு வருக என்று கூறி ; சூழ்மணி மோதிரம் சுடர்ந்து வில்இட அங்கை நீட்டினான் - விரலைச் சூழ்ந்த மணியாழி சுடர்விட்டு ஒளிவீச அங்கையை நீட்டினான்.

 

   (வி - ம்.) அடி வாழ்க என்றல் முறைமை. குணமாலையையும் சுரமஞ்சரியையும் குறித்துத் தோழியர் என்றான். 'தோழியர் சுவாகதம்' எனப் பாடம் ஓதி, 'வியந்து' தோழி சுகமே வந்ததே என்றுமாம்.

 

   மைந்தன் நின் கழலடி வாழ்க என மாறுக. சுவாகதம் என்ற சொல்லிற்கு நல்வரவு என்றும் கிளி என்றும் பொருளுண்டு.

( 171 )
1022 பொன்னிய குரும்பையிற் பொலிந்த வெம்முலைக்
கன்னியர் தூதொடு காமர் பைங்கிளி
முன்னமே வந்தென முறுவல் நோக்கமோ
டென்னைகொல் வரவென வினிய செப்பினான்.

   (இ - ள்.) பொன் இயல் குரும்பையின் பொலிந்த வெம்முலைக் கன்னியர் தூதொடு - பொன்னாலியன்ற குரும்பைபோல விளங்கும் வெம்முலைக் கன்னியரின் தூதாக; காமர் பைங்கிளி முன்னமே வந்தென - அழகிய பச்சைக்கிளி என் முன்னரே வந்தது என்றெண்ணி; முறுவல் நோக்கமொடு - நகைமுகப் பார்வையுடன்; வரவு என்னைகொல் என - வரவு எதனைக் கருதியோ என்று; இனிய செப்பினான் - இனிய மொழிகளை இயம்பினான்.

 

   (வி - ம்.) என் முன்னமே என்றான், பின்பும், 'ஆற்றாதேன் ஆற்ற, விடுந்த சிறுகிளி' (சீவக. 1041) என்கின்றமையின். 'வந்ததென' என்பது 'வந்தென' என விகாரப்பட்டது.

( 172 )