பக்கம் எண் :

                   
குணமாலையார் இலம்பகம் 601 

1050 கந்துகப் புடையிற் பொங்குங்
  கலினமா வல்லன் காளைக்
கெந்தையும் யாயு நேரா
  ராய்விடி னிறத்த லொன்றோ
சிந்தனை பிறிதொன் றாகிச்
  செய்தவ முயற லொன்றோ
வந்ததா னாளை யென்றாள்
  வடுவெனக் கிடந்த கண்ணாள்.

   (இ - ள்.) வடு எனக் கிடந்த கண்ணாள் - (மேலும்) மாவடுவைப் போன்ற கண்ணினாள்; கந்துகப் புடையில் பொங்கும் கலினமா வல்லன் காளைக்கு - பந்தின் புடைத்தல் போல விரைகின்ற புரவியைச் செலுத்த வல்லனாகிய காளைக்கு; எந்தையும் யாயும் நேரார் ஆய்விடின் - என் தந்தையும் தாயும் கொடுக்க ஒவ்வாராயின்; இறத்தல் ஒன்றோ - இறந்துபடுதலோ; சிந்தனை பிறிது ஒன்றாகிச் செய்தவம் முயறல் ஒன்றோ - வேறு நினையாமல் செய்யும் தவத்தினைக் கைக்கொள்ளுதலோ; நாளை வந்தது என்றாள் - நாளைக்கு (இவ்விரண்டில் ஒன்று) நமக்கு வந்துற்றது என்று அழுதாள்.

 

   (வி - ம்.) 'ஆகி - ஆக : குரவர் நினைவு வேறாய்ப்போக' என்பர் நச்சினார்க்கினியர்.

 

   கலினமா - குதிரை. வல்லனாகிய காளை என்க. காளை - சீவகன். வந்தது என்று இறந்த காலத்தாற் கூறினாள், ”வாராக் காலத்து வினைச்சொற் கிளவி, இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தேர்னறும், இயற்கையும் தெளிவும் கிளக்குங் காலை” என்பதோத்தாகலான்.

( 200 )
1051 தேனெய்போன் றினிய சொல்லாள்
  சிறுமுதுக் குறைமை கேட்டே
யூனைநைந் துருகிக் கைத்தா
  யுண்ணிறை யுவகை பொங்க
வானெய்பாற் கிவர்ந்த தொத்த
  தழேற்கவென் பாவை யென்று
தானையாற் றடங்க ணீரைத்
  துடைத்துமெய் தழுவிக் கொண்டாள்.

   (இ - ள்.) கைத்தாய் - (அதனைக் கேட்ட) செவிலித்தாய்; தேன்நெய் போன்று இனிய சொல்லாள் - தேனும் நெய்யும்போல இனிய சொல்லினாளின்; சிறு முதுக்குறைமை கேட்டு - சிறு பருவத்தினும் பேரறிவுடைமை கேட்டு; ஊன் நைந்து உருகி-