பக்கம் எண் :

                     
குணமாலையார் இலம்பகம் 644 

நலமுறுங் கொடி போன்றவளே!; யாதும் கவல வேண்டா - ஏதும் கவலையடைய வேண்டா ; இது ஓர் பொருளுரை கேள் என்றான் - இந்த ஒரு பொருளுடைய மொழியைக் கேள் என்றான்.

 

   (வி - ம்.) பழைய நிலையோ சிறையோ என்றாள்.

 

   தந்தை - கந்துகன். இல்லம், இலம் என விகாரமுற்றுநின்றது. தாய் : சுநந்தை. ஐயற்கு - சீவகனுக்கு. யாவதும் - ஒருசிறிதும். பொன்னலங்கொடி என்றது காமவல்லியை ; இது சுநந்தைக்குவமை. பொருளுரை - உறுதிமொழி.

( 273 )
1124 மதுமடை திறந்து தீந்தேன்
  வார்தரு கோதை நீமுன்
செதுமகப் பலவும் பெற்றுச்
  சிந்தைகூர் மனத்தை யாகி
யிதுமக வழியின் வாழே
  னிறப்பல்யா னென்னு மாங்கட்
கதுமெனக் கடவு டோன்றிக்
  கடைமுகங் குறுக வந்தான்.

   (இ - ள்.) தீ தேன் மதுமடை திறந்து வார்தரு கோதை - இனிய வண்டினத்திற்கு மதுவின் மடைதிறந்து ஒழுங்குங் கோதை போல்வாய் !; நீ முன் செதுமகப் பலவும் பெற்றுச் சிந்தைகூர் மனத்தையாகி - நீ முன்னர் சாப்பிள்ளை பலவற்றையும் பெற்றுச் சிந்தனையுடைய மனத்தையாய்; இது மகவு அழியின் வாழேன் - இம் மகவு இறப்பின் வாழமாட்டேன் ; யான் இறப்பல் என்னும் ஆங்கண் - நான் இறந்துபடுவேன் என்ற அளவிலே ; கதுமெனக் கடவுள் தோன்றிக் கடைமுகம் குறுக வந்தான் - விரைந்து ஒரு முனிவன் தோன்றித் தலைவாயிலை நெருங்கி வந்தான்.

 

   (வி - ம்.) கோதை - விளி. செதுமகவு - சாப்பிள்ளை. சிந்தை - துன்பம். மனத்தை : முன்னிலைஒருமை. இதுமகவு - இம்மகவு. கதுமென: விரைக் குறிப்பு. கடவுள் - துறவி. கடைமுகம் - தலைவாயில்.

( 274 )
1125 கறவைகாண் கன்றின் வெஃகிக்
  கண்டடி பணிந்து காமர்
நறவயா வுயிர்க்கு மாலை
  நாற்றிய விடத்து ளேற்றி
யறவியாற் காறு மூன்று
  மமைந்தநா லமிர்த மேந்தப்
பறவைதா துண்ட வண்ணம்
  பட்டினிப பிரிவு தீர்த்தான்.