பக்கம் எண் :

         
         
குணமாலையார் இலம்பகம் 648 

   இனி, 'அற்றம் இன் மணியை அங்கையிற் கொண்டோர் அம் மணியை நன்றாக அறியுமாறு போல' என உவமையாகக் கூறின் பன்மையொருமை மயக்கம் இராது.

( 279 )
1130 ஒன்றுநீர் கவலல் வெண்டா
  வுலகெலா மாளுஞ் சீர்த்திப்
பொன்றிக ழுருவி னானோர்
  புண்ணியற் பெறுதி ரென்ன
நின்றநீ யுவந்து நீங்க
  நிகழ்பொரு ளெனக்குச் செப்பிப்
பின்றையு நிகழ்வ துண்டு
  பேசுவல் கேளி தென்றான்.

   (இ - ள்.) ஒன்றும் நீர் கவலல் வேண்டா - எதற்கும் நீர் வருந்த வேண்டா ; உலகு எலாம் ஆளும் சீர்த்தி - உலகமெல்லாம் ஆளும் சிறப்பினையுடைய ; பொன்திகழ் ஒளியினான் ஓர் புண்ணியன் பெறுதிர் என்ன - பொன்போல் விளங்கும் ஒளியையுடைய நன்மகனைப் பெறுவீர் என்று கூற ; நின்ற நீ உவந்து நீங்க - (அதனைக் கேட்டு) ஆங்கு நின்ற நீ மகிழ்ந்து செல்ல, அதன்பின் ; நிகழ்பொருள் எனக்குச் செப்பி - (அம் மகனுக்குப் பிறப்பு முதல் துறவளவும்) நிகழ்பொருளை எனக்குக் கூறி ; பின்றையும் நிகழ்வதுண்டு - பின்னர் நிகழுமொரு துன்பமும் உண்டு ; பேசுவல் இது கேள் என்றான் - கூறுவேன் ; இதனைக் கேள் என்று மேற்கூறினான்.

 

   (வி - ம்.) பெறுதிர் என்றது சுநந்தைக்குப் பிள்ளை பெறுவை என்றாற் போலிருந்தது. அவன் கூறியது வளர்க்கப் பெறுவீர் என்று.

( 280 )
1131 நிலவுறழ் பூணி னானை
  நெடுநக ரிரங்கக் கையாத்
தலபல செய்து கொல்வா
  னருளிலான் கொண்ட போழ்திற்
குலவிய புகழி னானைக்
  கொண்டுபோ மியக்க னஞ்சல்
சிலபகல் கழிந்து காண்டி
  சிந்தியீ தென்று சொன்னான்.

   (இ - ள்.) நிலவு உறழ் பூணினானை - நிலவை மாறுபடும் ஒளியுறு பூணினையுடையவனை; நெடுநகர் இரங்கக் கையாத்து - பெருநகர் புலம்பக் கையைப் பிணித்து; அலபல செய்து கொல்வான் - தகவற்றன பல செய்து கொல்வதற்கு ; அருள்