பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 696 

   (வி - ம்.) கொல் : அசை. பன்னிரு மதியின் : இன் : சாரியை; ஏழனுருபு என்றும் புறனடையாற் கொள்கவென்றும் நச்சினார்க்கினியர் கூறுவர். மற்றும் அவர், 'வெள்ளிமலையிற் றோன்றி வந்த மனைப்பெருங்கிழத்தி தன்னை, மாசில்லாத மகள்தன்னை' எனப் பிரித்துக் கூட்டித் தத்தையையும் குணமாலையையுங் கொள்க என்பர். 'சீவகன் பன்னிரு மதிக்குள்ளே இராசமா புரத்தே சென்று குணமாலையை எய்தினானேனும் மனக்கவற்சி யின்றி நிலைபெற இருந்து எய்தாமையின் அதனைத் தேவன் கூறானாயினான்' என்றும், 'இனித் தத்தையையே நினைந்தானென்னிற் குணமாலையை வரைந்ததற்கு நிகழ்ந்த ஊடல் தீர்த்துப் புணராமையின், அவளையே நினைந்தான் என்க' என்றும் நச்சினார்க்கினியரே கூறுவதாலும், 'முன்னையாள் போன்று தத்தை முகத்துளே தோன்றுகின்றாள்' (1626) எனப் பின்னரும் தத்தையையே நினைந்தான் என வருவதாலும் அங்ஙனம் பிரித்துக்கூட்டி இருவராக்கிக் கூறுதலிற் பயனின் றென்க. 'மனைப் பெருங்கிழத்தி'யைக் குணமாலையெனக் கூறுவதும் பொருத்தமின்று, 'பெருங்கிழத்தி' தத்தையே ஆதலான்.

( 55 )
1221 ஆறிரு மதியி னெய்தி யரட்டனை யடர்த்து மற்றுன்.
வீறுயர் முடியுஞ் சூடி விழுநிலக் கிழமை பூண்டு
சாறயர்ந் திறைவற் பேணிச் சார்பறுத் துய்தி யென்று
கூறினன் கதிர்கள் பொங்குங் குளிர்மணி முடியினானே.

   (இ - ள்.) ஆறிரு மதியின் எய்தி - பன்னிரண்டாந் திங்களிலே இராசமாபுரமடைந்து; அரட்டனை அடர்த்து - கட்டியங்காரனைக் கொன்று; மற்ற உன் வீறுயர் முடியும் சூடி - பிறகு, உனக்குத் தொன்றுதொட்டு வந்த சிறப்புற்றுயர்ந்த முடியையும் புனைந்து; விழுநிலக் கிழமை பூண்டு - விழுமிய நிலவுரிமையைக் கொண்டு; சாறு அயர்ந்து - விழாக் கொண்டாடி; இறைவன் பேணி - அருகப் பெருமானை வழிபட்டு; சார்பு அறுத்து உய்தி என்று - பிறப்பைக் கெடுத்து வீடு பெறுவை என்று; கதிர்கள் பொங்கும் குளிர்மணி முடியினான் கூறினன் - ஒளி வீசும் தண்ணிய மணிமுடியுடைய சுதஞ்சணன் உரைத்தான்.

   (வி - ம்.)உரிமை மகளிர் முன் கூறினானாதலின் வெளிப்படையானவற்றை விளம்பினான்.

( 56 )
1222 சொற்றிறற் சூழ்ச்சி மிக்க சுதஞ்சணன் சுருங்க நாடி
விற்றிறற் குருசிற் கெல்லாம் வேறுவே றுரைப்பக் கேட்டே
சுற்றிய தோழி மாரை விடுத்தனன் றொழுது நின்றான்
கற்பக மரமுஞ் செம்பொன் மாரியுங் கடிந்த கையான்.

   (இ - ள்.) சொல் திறல் சூழ்ச்சி மிக்க சுதஞ்சணன் - சொல்வன்மையும் சூழ்ச்சியும் மிகுந்த சுதஞ்சணன்; வில்திறல் குருசிற்கு - வில் வன்மையுடைய சீவகனுக்கு; எல்லாம் சுருங்கநாடி - வேண்டுவன யாவற்றையும் சுருக்கமாக ஆராய்ந்து; வேறு