பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 702 

தன் மனைவியுடன்; தொடு மரைத்தோலன் வில்லன் மரவுரி உடையன் தோன்ற - புனைந்த மான்தோலுடனும் வில்லுடனும் மரவுரியுடனும் காணப்பட; வடிநுனை வேலினான் கண்டு எம்மலை உறைவது என்றான் - கூரிய முனையுடைய வேலனாகிய சீவகன் கண்டு, 'நீ எம்மலையில் வாழ்பவன்' என்று வினவினான்.

   (வி - ம்.) கொழுந்தடி - கொழுவிய ஊன். நறவு - கள். முதிர்முலையினாள் : வினைத்தொகை. பெண், ஈண்டு மனைவி என்னும் பொருள்பட நின்றது. தோலன் - செருப்பினன், மான் தோலால் செய்த செருப்பு என்க. மரவுரியாகிய உடையினையுடையன் என்க. வேலினான் : சீவகன்.

( 66 )
1232    மாலைவெள் ளருவி சூடி
மற்றிதா தோன்று கின்ற
   சோலைசூழ் வரையி னெற்றிச்
சூழ்கிளி சுமக்க லாற்றா
   மாலையந் தினைகள் காய்க்கும்
வண்புன மதற்குத் தென்மேன்
   மூலையங் குவட்டுள் வாழுங்
குறவருட் டலைவ னென்றான்

   (இ - ள்.) மாலைவெள் அருவி சூடி இதா தோன்றுகின்ற - மாலைபோல வெள்ளிய அருவியை அணிந்த இதோ காண்குறுகின்ற; சோலைசூழ் வரையின் நெற்றி - சோலை சூழ்ந்த மலையின் உச்சியிலே; சூழ்கிளி சுமக்கல் ஆற்றா மாலை அம் தினைகள் காய்க்கும் வண்புனம் - சூழ்ந்து வரும் கிளிகள் சுமக்க இயலாத, மாலை போல அழகிய தினைகள் விளைந்திருக்கும், வளமுறு புனம் ஒன்று உண்டு; அதற்குத் தென்மேல் மூலை - அப் புனத்திற்குத் தென் மேலே மூலையிலே உள்ள; அம் குவட்டுள் வாழும் குறவருள் தலைவன் என்றான் - அழகிய மலையுச்சியிலே வாழும் வேடர்களுக்குத் தலைவன் யான் என்று அவ் வேடன் விளம்பினான்.

   (வி - ம்.) மற்று : அசை. இதா : திசைச்சொல்.

   இதா - மரூஉமுடிபுமாம். நெற்றி - உச்சி. மாலையந்தினைகள் - ஒழுங்குபட்ட தினைக்கதிர்கள் எனினுமாம். வண்புனம் - வளப்பமுடைய கொல்லை. தென்மேல் மூலை - தென்மேற்காகிய கோணம்.

( 67 )
1233    ஊழினீ ருண்ப தென்னென்
றுரைத்தலு முவந்து நோக்கி
   மோழலம் பன்றி யோடு
முளவுமாக் காதி யட்ட