பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 72 

123 வரைநிரை யருவியின் மதமிசை சொரிவன
புரைநிரை களிறொடு புனைமணி யியறோ்
விரைநிரை யிவுளியொ டிளையவர் விரவுபு
குரைநிரை குளிர்புனல் யாற்றின தொருபால்.

   (இ - ள்.) வரைநிரை அருவியின் மதம்மிசை சொரிவன - மலையிலிருந்து வீழும் ஒழுங்கான அருவியைத் தம்மேலே சொரிந்து கொள்வனபோல மதத்தை மேலே சொரிவனவாகிய; புரைநிரை களிறொடு - உயர்ச்சியுறுங் களிற்றோடும்; புனைமணி இயல்தேர் விரைநிரை இவுளியொடு - மணிபுனைந்த தேரிற் பூட்டினால் விரைந்து செல்லும் குதிரைகளோடும்; இளையவர் விரவுபு - இளைஞர்கள் கலந்து; குரைநிரை குளிர்புனல் யாற்றினது ஒருபால் - ஒலியுடன் நிரைத்த குளிர்ந்த நீர்செல்லும் யாறுடையது ஒரு பக்கம்.

 

   (வி - ம்.) அருவிபோல் வீழ்கின்ற மதமென்பாரும் உளர். 'மிகை' என்றும் பாடம்.

( 94 )
124 வரிவளை யரவமும் மணிமுழ வரவமு
மரிவளர் கண்ணிய ரணிகல வரவமும்
புரிவளர் குழலொடு பொலிமலி கவினிய
திருவிழை கடிமனை திறவிதின் மொழிவாம்.

   (இ - ள்.) வரிவளை அரவமும் - சங்கொலியும்; மணிமுழவு அரவமும் - முழவொலியும்; அரிவளர் கண்ணியர் அணிகல அரவமும் - செவ்வரி பரவிய கண்ணினருடைய பூண்களின் ஒலியும்; புரிவளர் குழலொடு - நரம்பிடத்து இசைவளர்தற்குக் காரணமான குழலொலியொடு; பொலிமலி கவினிய திருவிழை கடிமனை திறவிதின் மொழிவாம் - பொலிவுமிக்க அழகுடைய செல்வம் நிறைந்த மனைகளைப் பற்றிச் செவ்விதாகக் கூறுவோம்.

 

   (வி - ம்.) புரிவளர் குழல் - நரம்பிடத்து இசை வளர்தற்குக் காரணமாகிய குழல். 'குழல்வழி யாழெழீஇத் தண்ணுமைப் பின்னர்- முழவியம்ப லாமந் திரிகை' (கூத்தநூல்.) புரி - விருப்பமுமாம்.

 

   இஃது அரசற்குரியவர் இருப்பு.

( 95 )

வேறு

 
125 பாவை யன்னவர் பந்து புடைத்தலிற்
றூவி யன்னம் வெரீஇத்துணை யென்றுபோய்க்
கோவை நித்தில மாடக் குழாமிசை
மேவி வெண்மதி தன்னொ டிருக்குமே.