பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 762 

வேறு

 
1346 கயற்க ணாளையுங் காமனன் னானையு.
மியற்றி னார்மண மேத்தருந் தன்மையார்
மயற்கை யில்லவர் மன்றலின் மன்னிய
வியற்கை யன்புடை யாரியைந் தார்களே.

   (இ - ள்.) ஏத்த அருந் தன்மையார் - புகழ்தற்கரிய தன்மையுடையார் ஆகிய தனபதி முதலாயினோர்; கயற்கணாளையும் காமன் அன்னானையும் - பதுமையையிம் சீவகனையும்; மணம் இயற்றினார் - திருமணம் புரிவித்தனர்; மயற்கை இல்லவர் மன்றலின் மன்னிய - குற்றமற்ற கந்தருவரின் மணத்தைப் போல முன்பே பொருந்திய; இயற்கை அன்பு உடையார் இயைந்தார்கள் - இயற்கைப் புணர்ச்சியால் உள்ள அன்புடையார் தம்மிற் கூடினார்.

 

   (வி - ம்.) கயற்கணாள் : பதுமை. காமனன்னான் : சீவகன். ஏத்தருந்தன்மையார் என்றது தனபதி முதலாயினாரை. மயற்கை - குற்றம். மயற்கை யில்லவர் மன்றல் என்றத குற்றமற்ற தமிழச் சான்றோர் வகுத்த மணம் என்றவாறுமாம். முன்னரே கள்ளப்புணர்ச்சி யுடையாராகலின் இயற்கை யன்புடையார் என்றார்.

( 181 )
1347 வாளும் வேலு மலைந்தரி யார்ந்தகண்
ணாளும் வார்கழன் மைந்தனு மாயிடைத்
தோளுந் தாளும் பிணைந்துரு வொன்றெய்தி
நாளு நாகர் நுகர்ச்சி நலத்தரே.

   (இ - ள்.) வாளும் வேலும் மலைந்து அரியார்ந்த கண்ணாளும் - வாளையும் வேலையும் வென்று செவ்வரி பரந்த கண்ணாளும்; வார்கழல் மைந்தனும் - கட்டப் பெற்ற கழலையுடைய மைந்தனும்; ஆயிடை - பள்ளியிலே; தோளும் தாளும் பிணைந்து - தோளும் தோளும் தாளும் தாளும் பிணைதலின்; உரு ஒன்று எய்தி - ஒரு வடிவைப் பெற்று; நாளும் நாகர் நுகர்ச்சி நலத்தர் - நாள்தோறும் நாகர் நுகர்கின்ற நுகர்ச்சியின்பத்தை உடையராயினர்.

 

   (வி - ம்.) மலைந்து - வென்று. அரி - செவ்வரி கருவரிகள். கண்ணாள்; பதுமை. மைந்தன் : சீவகன். ஆயிடை என்றது - பள்ளிக்கட்டிலிடத்தே என்பதுபட நின்றது. தோளோடு தோளும் தாளொடு தாளும் பிணைதலானே என்க. நாகர் - பவணலோகத்தார்.

( 182 )
1348 தணிக்குந் தாமரை யாணலந் தன்னையும்
பிணிக்கும் பீடினி யென்செயும் பேதைதன்
மணிக்கண் வெம்முலை தாம்பொர வாயவிழ்ந்
தணிக்கந் தன்னவன் றாரங் குடைந்ததே.