பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 773 

   (இ - ள்.) விளக்கே! - விளக்கே!; வான் பொருள் விளக்கு வாய் - நல்ல பொருள்களை விளக்கிக் காட்டுவாய்; வளர்த்த செம்மையை - எங்களை வளர்த்த மனக் கோட்டமிலாதாய்; வாலியை - தூய தன்மையுடையாய் (ஆதலால்); இவண் அளித்த காதலொடு ஆடும் என் ஆருயிர் - இங்கே அருளிய காதலுடன் நடந்து திரியும் என் சிறந்த உயிர்; ஒளித்தது எங்கு - ஒளித்த இடம் எங்கே?; விளக்காய் - எனக்கு விளக்கிக் கூறுவாய்; என ஒண்சுடர் நண்ணினாள் - என்று வேண்டி ஒள்ளிய விளக்கினிடம் சென்றாள்.

 

   (வி - ம்.) குழந்தைகட்கு விளக்கைக் காவலாக இடுதலின், எங்களை வளர்த்த மனக்கோட்டமிலாதாய் என்றாள்.

 

   செம்மையை - செப்பமுடையை, அஃதாவது மனக்கோட்ட மின்மையை உடையயை. ”சொற்கோட்ட மில்லது செப்பம் ஒருதலையா உட்கோட்ட மின்மை பெறின்” என்பது திருக்குறள். விளக்கிற்குச் செம்மை - செந்நிறமுடைமை என்க. வாலியை - தூயை : முன்னிலை ஒருமை. என் ஆருயிர் என்றது சீவகனை.

( 202 )
1368 பருகிப் பாயிரு ணிற்பி னறாதெனக்
கருகி யவ்விருள் கான்றுநின் மெய்யெலா
மெரிய நின்று நடுங்குகின் றாயெனக்
குரிய தொன்றுரைக் கிற்றியென் றூடினாள்.

   (இ - ள்.) பாயிருள் பருகி - (அவாவின் மிகுதியால் அறாதென்று பாராமல்) பரவிய இருளைப் பருகி; நிற்பின் அறாது என - வயிற்றில் இருப்பின் நீங்காதென்று கருதி; கருகி அவ் இருள் கான்று - முகம் கருகி அந்த இருளை உமிழ்ந்து; நின் மெய் எலாம் எரிய நின்று நடுங்குகின்றாய் - பின்னும் தங்கி வருத்துமோ என்று உன் உடம்பெல்லாம் எரியும்படி நின்று நடுங்குகின்றனை; எனக்கு உரியது ஒன்று உரைக்கிற்றி - நீ எனக்குத் தக்கதையறிந்து உரைப்பாய்; என்று ஊடினாள் - என்று வெறுத்தாள்.

 

   (வி - ம்.) விளக்காமையின், அதனை இழித்துக் கூறுகின்றாள். உரைக்கிற்றி : இகழ்ச்சி.

 

   பாய் இருள் - பரவிய இருள். கருகி என்றது - திரி கருகுவதனை. விளக்கு அசைதல் பற்றி நடுங்குகின்றாய் என்றாள். உரைக்கிற்றி என்றது உரைப்பாய் என்னும் பொருட்டு; அஃது உரையாய் என்னும் எதிர்மறைப் பொருள் குறித்து நின்றது.

( 203 )
1369 கோடி நுண்டுகி லுங்குழை யுந்நினக்
காடு சாந்தமு மல்லவு நல்குவேன்
மாட மேநெடி யாய்மழை தோய்யந்துளாய்
நாடி நண்பனை நண்ணுக நன்றரோ