பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 843 

வேறு

 
1494 கோதையுங் குழலும் பொங்கக்
  குவிமுலைக் குழங்கன் மாலைப்
போதுகப் பொருது பூணும்
  பொருகடன் முத்து மூழ்கக்
காதலுங் களிப்பு மிக்குக்
  கங்குலும் பகலும் விள்ளார்
சாதலும் பிறப்பு மில்லாத்
  தன்மைபெற் றவர்க ளொத்தார்.

   (இ - ள்.) கோதையும் குழலும் பொங்க - அவள் தன்னுடைய மலர் மாலையும் கூந்தலும் பொங்க; குவிமுலைக் குழங்கல் மாலைப்போது உக - குவிந்த முலைமேல் அணிந்த மணமுறு மாலையிற் பூக்கள் சிந்த; பூணும் பொருகடல் முத்தும் பொருது மூழ்க - அணிகலனும் கடல் முத்தும் பிணங்கி ஒன்றில் ஒன்று மூழ்கப் (புணர்தலின்), காதலும் களிப்பும் மிக்குக் கங்குலும் பகலும் விள்ளார் - காதலையும் களிப்பையும் மிகக்கொண்டு இரவும் பகலும் பிரியாராய்; சாதலும் பிறப்பும் இல்லாத் தன்மை பெற்றவர்கள் ஒத்தார் - இறப்பும் பிறப்பும் அற்ற தன்மையுடையவானவரைப் போன்றனர்.

 

   (வி - ம்.) முன்னர் (80) அக்கடல் அமுதம் ஈந்ததென்றார் ஈண்டும் அவ்வமுதினை நுகர்ந்து மூவாமையுஞ் சாவாமையும் பெற்ற அத்தேவர்களை ஒத்தார் என்றமை உணர்க.

 

   குழங்கல் : மணம்.

( 83 )
1495 புனைமலர்த் தாரி னானும் போதணி கொம்ப னாளு
நனைமலர்க் காவு மந்தண் வாலியு நல்ல வாடிச்
சுனைமலர்க் குவளை குற்றுச் சூழ்மலர்க் கண்ணி சூட்டி
வினைநல நுகர்ந்து செல்வார் விதியினான் மிக்க நீரார்.

   (இ - ள்.) விதியினால் மிக்க நீரார் - ஊழினால் அன்பு மிக்காராகிய ; புனை மலர்த் தாரினானும் போது அணி கொம்பு அனாளும் - ஒப்பனை செய்த மலர்மாலையானும் மலரணிந்த கொம்பு போன்றவளும்; நல்ல நனை மலர்க்காவும் அம் தண்வாவியும் ஆடி - அழகிய குளிர்ந்த மலர்ப்பொழிலிலும் அழகிய குளிர்ந்த குளத்திலும் ஆடி; சுனைமலர்க் குவளை குற்று - சுனையிலுள்ள குவளை மலர்களைப் பறித்து; சூழ் மலர்க் கண்ணி சூட்டி - மலர் சூழ்ந்த கண்ணி புனைந்து; வினைநலம் நுகர்ந்து செல்வார் - புணர்ச்சித் தொழிலின் அழகை நுகர்ந்து போந்தனர்.