பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 853 

தக்கதுவோ சொலாய் - (நாம் ஒன்றி வாழும் இந்நாளிலே) தனியளாவது நினக்குத் தகுதியோ? கூறுவாய்.

   (வி - ம்.) கனிகொள் காமம் - முதிர்ந்த காமம். எம்மியல்பினை நன்கு அறிந்துவைத்தும் இங்ஙனம் எம்மைத் தனிக்க விடுவது நினக்குத்தகுமோ என்றவாறு.

( 99 )
1511 கழலு நெஞ்சொடு கைவளை சோருமாற்
சுழலுங் கண்களுஞ் சூடுறு பொன்னென
வழலு மேனியு மாற்றலெ னையவோ
நிழலி னீப்பருங் காதலு நீத்தியோ.

   (இ - ள்.) ஐயவோ - ஐயனே!; கழலும் நெஞ்சொடு கைவளை சோரும் - போகின்ற நெஞ்சுடன் கைவளையும் போகா நின்றது; கண்களும் சுழலும் - கண்களும் பரவிப் பரவி நோக்கும்; சூடு உறு பொன் என மேனியும் அழலும் - உருகும் பொன்போல மெய்யும் அழல்கின்றது; ஆற்றலென் - ஆதலின் ஆற்றகில்லேன்; நிழலின் நீப்பருங் காதலும் நீத்தியோ - நிழலைப்போல நீத்தற்கரிய காதலையும் நீத்தனையோ?

   (வி - ம்.) ஐயவோ : ஓ : இரக்கம். நீத்தியோ : ஓ : வினா.

( 100 )
1512 திருந்து மல்லிகைத் தேங்கமழ் மாலையான்
புரிந்து சூடினும் பூங்கொடி நுண்ணிடை
வருந்து மான்மட வாயெனும் வஞ்சநீ
கரிந்தி யானையக் காண்டலும் வல்லையோ.

   (இ - ள்.) திருந்தும் மல்லிகைத் தேம்கமழ் மாலை யான் புரிந்து சூடினும் - திருந்திய மல்லிகை மலர்களாலாகிய மணங்கமழும் மாலையை நான் விரும்பியணிந்தாலும்; மடவாய் பூங்கொடி நுண் இடை வருந்தும் எனும் வஞ்ச - 'பேதையே! மலர்க்கொடி யனைய நின் மெல்லிடை வருந்தும்' என்கிற வஞ்சனே!; யான் கரிந்து நையக் காண்டலும் வல்லையோ - யான் கருகி வருந்தக் கண்டிருத்தற்கும் நீ வல்லையோ?

   (வி - ம்.) வல்லையோ : ஓ : வினா.

   யான் கரிந்து நைதற்கு ஏதுவாகிற செயலைச் செய்யத் துணிந்த நீ முன்னர் மடவாய் நுண்ணிடை வருந்தும் என்றது வஞ்சகமொழியே என்பது அறிந்தேன் என்றவாறு. வல்லையோ - வன்மையுடையையோ.

( 101 )
1513 தொண்டை வாயிவ டொய்யில் வனமுலை
கண்டு தேவர் கனிபவென் றேத்துவாய்
வண்டு கூறிய வண்ண மறிந்திலேன்
விண்டு தேன்றுளிக் கும்விரைத் தாரினாய்.