பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 862 

குடையானை; காமனே கண்ட போழ்தும் - காமனே பார்த்திட்டாலும் அக்காமனுக்கு; பண் அவாம் பவளச் செவ்வாய் - பண் விரும்பும் மொழியையுடைய பவளம் அனைய செவ்வாயையும்; படாமுலை - தளராத முலையையும்; பரவை அல்குல் - பரவிய அல்குலையும் உடைய; பெண் அவா நிற்கும் என்றால் - பெண்மையை அடைய விரும்பும் ஆசை உள்ளத்துலே நிற்கும் என்றால்; பிணை அனாட்கு உய்தல் உண்டோ - இவட்கும் பிழைத்தலுளதோ?

   (வி - ம்.) 'பெண்ணவாய்' என்பதூஉம் பாடம். காமனே : ஏ : பிரிநிலை.

   அக்காமன் பெண்மைத்தன்மை எய்தி இவனை நுகர்தற்கு விரும்புவன்; அத்தகைய பேரழகினோனை எய்திய இவள் பிரிவினை எங்ஙனம் ஆற்றுவள் என்று இரங்கியபடியாம்.

   ”ஆடவர் பெண்மையை அவாவு தோளினாய்” என்பது கம்பராமாயணம்: (தாடகை - 24).

( 117 )
1529 கடத்திடைக் கவளந் தேனெய்
  கனியைத்தோய்த் தினிய துற்றத்
தடக்கையாற் கொடுத்துப் புல்லுந்
  தவழ்மதக் களிறு நீங்கின்
மடப்பிடிக் குய்த லுண்டோ
  வாலடிக் குஞ்சி சூட்டுங்
கொடைக்கையான் பிரிந்த பின்றைக்
  கோதையாட் குய்த லுண்டோ.

   (இ - ள்.) தேன் நெய் கனியைத் தோய்த்து இனிய கவளம் துற்ற - தேனாகிய நெய்யைக் கனியில் தோய்த்தலாலே இனியவாகிய கவளத்தைத் தின்னும்படி; தடக்கையால் கொடுத்துப் புல்லும் தவழ் மதக் களிறு நீங்கின் - பெரிய கையினால் ஊட்டித் தழுவும் மதம் பொருந்திய களிறு நீங்கினால்; கடத்திடை மடப்பிடிக்கு உய்தல் உண்டோ - காட்டிலே இளம்பிடிக்கு வாழ்வு உண்டோ?; (அதுபோல) வாலடிக் குஞ்சி சூட்டும் கொடைக் கையான் பிரிந்த பின்றை - இவளுடைய தூய அடியிலே தன் முடியை வைத்து ஊடல் தீர்த்துக் கூடும் வண்கையான் நீங்கின பிறகு; கோதையாட்கு உய்தல் உண்டோ - கோதையை உடைய இவளுக்கு வாழும் இயல்பு உண்டோ?

   (வி - ம்.) கடம் - காடு. தேனெய் - பண்புத் தொகை. இனிய, பல வறிசொல். துற்றல் - உண்ணல். மதந்தவழ் களிறு என மாறுக. குஞ்சி - குடுமி, தலைமயிர். ஊடலை நீக்குவதற்குக் கணவன் மனைவியின் காலில் வீழ்ந்து வணங்கினான் என்று கூறுவது இலக்கிய மரபு.

( 118 )