பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 882 

   பலரோடும் செல்லலாயினர். அவர்கள் செல்லுநெறியில் இருந்ததொரு தவப் பள்ளியின் மருங்கே தங்கினர். அத்தவப் பள்ளியே விசயை நோற்றிருக்கும் பள்ளியாகும். விசயை அவர்களை நீவிர்யாவர்? எவ்வூரீர்? யாண்டுச் செல்கின்றீர்? என வினவினள். அவட்கு விடை கூறிய தேவதத்தன், சீவகன் வரலாறும் கூறும்படி யாயிற்று. அவன் கட்டியங்காரன் சீவகனைக் கொல்லக் கருதி என்று சொல்லும்பொருட்டுச் சீவகனைக் கொல்ல என்ற வளவிலே விசயை மூர்ச்சையுற்று விழுந்தாள். இந் நிகழ்ச்சியால் தோழன்மார் இவரே சீவகனுடைய நற்றாய் என்றும் சீவகன் இறைமகன் என்றும் அறிந்து கொண்டனர். சீவகன் இறவாதிருத்தலை விசயைக்கு விளக்கிக் கூறினர். விசயை சீவகனை நினைந்து பலவாறாகப் புலம்பினாள். தோழன்மாரை நோக்கி ”அன்பரீர்! சீவகசாமியை என்பால் அழைத்து வம்மின்,” என்று இரந்தனள். தோழர்கள் அவளை வணங்கி அங்ஙனமே அழைத்து வருவதாக வுணர்த்தி அவளைத் தேற்றி விடை பெற்றுச் சென்றனர்.

   சென்ற தோழர்கள் சீவகனிருக்கும் ஏமமாபுரத்தை அணுகி அவனைக் காண்டல் எங்ஙனம் என்று தம்முட் சூழ்ச்சிசெய்து அந் நகரத்து ஆனிரையைக் கவர்ந்துகொண்டனர். அஃதறிந்த அரசன் சினந்து அவ்வானிரையை மீட்கும்பொருட்டுப் படைகளை ஏவினான். அப் படைக்குத் தலைவராய்ச் சீவகனும் நந்தட்டனும் வந்தனர். அதுகண்ட பதுமுகன் நம் சூழ்ச்சி பலித்தது என்று மகிழ்ந்து, ஓர் அம்பில் ”நின்னடியேம் நின் திருவடியிலுறைதல் வேண்டிச் சச்சந்தன் மகனாகிய நின்னைக் காணவே வந்துள்ளேம்” என்று எழுதி அதனைச் சீவகன் அடிகளிலே விழும்படி எய்தான். அக் கணையையும் அதன்கட் பொறித்த செய்தியையும் அறிந்த சீவகன் இங்ஙனம் அம்பேவியவன் பதுமுகனே ஆதல்வேண்டுமென்று துணிந்தனன்.

   பின்னர்ப் போர் நிகழாதபடி செய்து அவர்களைக் கண்டு அளவளாவினான். அரசன் திருமுன்னர் அழைத்தேகி இவரெல்லாம் என் ஆருயிர்த் தோழராவார் என்று அறிவுறுத்தினன். அரசனும் அவரை வரவேற்று மகிழ்ந்தான். பின்னர்ச் சீவகன் பதுமுகன் முதலியோரைத் தனியிடத்தே வைத்து 'யான் இறைமகனாதலை நீயிர் உணர்ந்ததெப்படி?” என்று வினவினன். அவர்களும் தாம் விசயையைத் தண்டகாரணியத்துத் தவப்பள்ளியிற் கண்டமை கூறினர். அதுகேட்ட சீவகன் ஆற்றாமையாலழு தனன். என்னே! என்னே! என்னே! எம் அடிகளாரும் உளரோ! உளரோ! என்று வினவினன். அவர்பால் இப்பொழுதே செல்லுதல்வேண்டும் என்று விரைந்தனன். தடமித்