பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 89 

   இனி, தாணிழற்றங்கிய வையம், அவன் உலகில் வைத்த காதலாலே களிக்கின்ற தென்றுமாம்.

 

   இவற்றால் (மூன்று செய்யுட்களாலும்) தெறலும் அளியும் அழகும் கொடையும் வீரமும் கல்வியும் முறை செய்தலும் கூறினார்.

 

   ஈண்டுத் தேவர் ” தாதையே” எனச் சச்சந்தனுக் கோதியதனையே கம்பநாடர் சிறிது மாற்றித் தயரதன் ”தாயொக்கும் அன்பின்” (4. அரசிய- 4) என்று தங்காப்பியத்து அமைத்துக் கொண்டார்

( 130 )
160 தருமன் றண்ணளி யாற்றன தீகையால்
வருணன் கூற்றுயிர் மாற்றலின் வாமனே
யருமை யாலழ கிற்கணை யைந்துடைத்
திரும கன்றிரு மாநில மன்னனே.

   (இ - ள்.) திரு மாநிலம் மன்னன் - திருவையுடைய மாநிலத்தின் மன்னனான சச்சந்தன்; தண் அளியால் தருமன் - (அமிர்தத்தை யொத்தலும் உலகை நிழற்றலும் ஆகிய) தண்ணிய அருளினால் அறக்கடவுளைப் போன்றவன்; தனது ஈகையால் வருணன் - (கலிமாற்றின) கொடையால் வருணனைப் போன்றவன்; உயிர் மாற்றலின் கூற்று- (தேர்த்தொகை மாற்றுமிடத்தால் அழற் சீற்றத்தனாய்) உயிரைப் போக்குதலாற் கூற்றுவனைப் போன்றவன்; அருமையால் வாமன் - (கலைக்கிடனாம்) அருமையால் வாமனைப் போன்றவன்; அழகின் கணை ஐந்துஉடை திருமகன் - (மகளிர்க்கு அணங்காகிய) அழகால் ஐங்கணை யேந்திய திருமகள் மகனான காமனைப் போன்றவன்.

 

   (வி - ம்.) இங்ஙனம் உவமை கூறுதற்குக் கொண்டு கூறினார். எனவே, கூறியது கூறல் அன்றென்க.

( 131 )
161 ஏனை மன்னர்த மின்னுயில் செற்றவேற்
றானை மன்னரிற் ரானிமி லேறனான்
றேனை மாரியன் னான்றிசை காவலன்
வானந் தோய்ப்புக ழான்மலி வெய்தினான்.

   (இ - ள்.) ஏனை மன்னர்தம் இன்னுயிர் செற்ற வேல்தானே மன்னரில் தான்இமில் ஏறனான் - மற்றைய (பகை) மன்னரின் இனிய உயிரைப் போக்கிய வேற்படையையுடைய தன் மரபு மன்னர்களில் தான் செருக்கினால் இமிலையுடைய ஏறு போன்றவன்; தேன்மாரி அன்னான் திசை காவலன் - மொழியால் தேன் மலையனையவனாகிய எட்டுத் திக்கிற்கும் அரசனாகிய அவன்; வானம் தோய் புகழால் மலிவு எய்தினான் - வானிற் பொருந்திய புகழாலே மிகுதல் பெற்றான்.

 

   (வி - ம்.) தேனை : ஐ : அசை.

( 132 )