பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 924 

நெருப்பிலே; மூழ்கி இறந்து படுங்கொலோ? - அழுந்தி இறந்து படுவாளோ?

   (வி - ம்.) அன்புற்றால், இவ்வாறு பிறமகளிரிடமும் இருப்பான் என்று கருதுதல் பரிவு. பாவைமார் எனப் பொதுவாகக் கூறியவன் தத்தையை எண்ணி, 'இறந்துபடுமோ?' என்றான். கொல் : ஐயம்.

   பாவைமார் - உவமவாகுபெயர். பரிவு - அன்பு. முரிவு - வருத்தம். மூர்ச்சனை - நெட்டுயிர்ப்பு.

( 71 )
1628 வாளி யம்பன வாட்டங் கண்ணிதன்
றோளு மென்முலைப் பாரமுந் தொன்னல
நாளு நாளினு நைந்துநைந் துள்சுடப்
பூளை மெல்லணை மேற்புற ளுங்கொலோ

   (இ - ள்.) வாளி அம்புஅன வாள் தடம் கண்ணி - அலகுடைய அம்புபோன்ற ஒளி பொருந்திய பெருங் கண்ணாள்; தன் தோளும் மென்முலைப் பாரமும் தொல்நலம் - தன்னுடைய தோளும் மென்மையான முலைப்பாரமும் தன் பழைமையான அழகு; நாளும் நாளினும் நைந்துநைந்து உள்சுட - ஒவ்வொரு நாளும் கெட்டுக் கெட்டு உள்ளம் வெதும்ப; பூளை மெல் அணைமேல் புரளுங்கொலோ? - பூளை மலர் முதலியவற்றாற் சமைத்த மெல்லிய அணையின் மேற் புரள்வாளோ?

   (வி - ம்.) வாளியம்பு - அலகம்பு. பூளை மெல்லணை என்றது பூளைப்பூ முதலியவற்றாற் சமைத்த அணை என்றவாறு. முன்பு என்றோளாகிய அணைமேல் துயின்றாள். இப்பொழுது தீயாகிய அணையிலே புரளுமோ என்றான் என்க.

( 72 )
1629 உருகி வாடியென் னுற்றது கொல்லெனக்
கருகி வாடிய காமரு கோதை
னிருக ணீரு மிடைமுலை பாய்ந்துகக்
குருகு பாய்தட மாகவ ழுங்கொலோ.

   (இ - ள்.) என் உற்றது கொல்என உருகி வாடி - (யான் போந்த பின்பு) எனக்கு யாது நேர்ந்ததோ என்று உருகி வாடுதலாலே; கருகி வாடிய காமரு கோதை தன் இருகண் நீரும் முலை இடை பாய்ந்து உக - கரிந்த மெலிந்த விருப்பூட்டும் மாலைபோல்வாள் தன் இருகண்களிலிருந்து வரும் நீரும் முலைகளினிடையே வடிந்துவீழ; குருகுபாய் தடம் ஆக அழும் கொலோ? - நாரைகள் பொருந்திய குளமாக அழுமோ?

   (வி - ம்.) 'கருங்கால் வெண் குருகு மேயும், பெருங்குள மாயிற்றென் இடைமுலை நிறைந்தே' ( குறுந் - 325) என்றார் பிறரும்.

   காமருகோதை - காந்தருவதத்தை. குருகு - நாரை. தடம் - குளம கொல் : ஐயமுணர்த்தியது. ஓர் : அசை.

( 73 )