பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 925 

1630 வண்டு வாழ்பயில் கோதை மணமுதற்
கண்ட ஞான்றுதன் கண்ணெனுங் கைகளா
னொண்டு கொண்டு பருகிய நோக்கமொன்
றுண்டெ னாவி யுருக்கி யிடுவதே.

   (இ - ள்.) வண்டு வாழ் பயில் கோதை - வண்டு வாழ்ந்து பயிலும் கோதையாள்; மணம் முதல் கண்ட ஞான்று - கூட்டத்திற்கு முன்னே கண்ட அன்று; தன் கண் எனும் கைகளால் - தன்னுடைய கண்கள் என்னும் கைகளாலே; நொண்டு கொண்டு பருகிய நோக்கம் ஒன்று உண்டு - முகந்துகொண்டு பருகிய பார்வை ஒன்று உண்டு; என் ஆவி உருக்கியிடுவது - அப்பார்வை என் உயிரை இப்போதும் உருக்கா நின்றது.

   (வி - ம்.) இந்நோக்கம் அவளுடைய இயற்கை நோக்கமே அன்றித் தலைநாள் தோன்றியவாறும் தோன்றிய தன்மையுங் கூறிற்று.

   கோதை என்பது கோதையையுடையாள் என்று காந்தருவதத்தையை யுணர்த்தியது. கோதை - கூந்தல்; பயில் கோதை; வினைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழி. நொண்டு கொண்டு - முகந்து கொண்டு.

( 74 )
1631 காத லாளுட லுள்ளுயிர் கைவிடி
னேத மென்னுயி ரய்தி யிறக்குமற்
றாத லாலழி வொன்றில ளல்லதூஉ
மாதர் விஞ்சையும் வல்லளு மல்லளோ.

   (இ - ள்.) காதலாள் உயிர் உடலுள் கைவிடின் - (யாங்கள் இருதலைப் பறவையேபோல் ஓருயிரேம் ஆதலின்) காதலையுடைய தத்தையின் உயிர் உடலில் நீங்கின்; என் உயிர் ஏதம் எய்தி இறக்கும் - என் உயிரும் துன்பம் அடைந்து நீங்கும்; ஆதலால் அழிவு ஒன்றிலள்- என்னுயிர் நீங்காமையின் அவளும் அழிவைப் பொருந்திலள்; அல்லதூஉம் மாதர் விஞ்சையின் வல்லளும் அல்லளோ! - அல்லாமலும், அவள் விஞ்சையினும் வல்லவள் அல்லளோ?

   (வி - ம்.) தன் பிரிவால் அவள் வருந்தி யிறந்து படுவாளோ என்று ஐயுற்றவன் தாம் காதலால் ஓருயிரும் ஈருடலுமாக ஒன்றியிருத்தலை நினைந்து தானிறவாமையின் அவளும் இறந்திராள் என்று சிறிது ஐயம் நீங்கினான். மற்றும் விஞ்சை வல்லவளாதலின் பன்னிருதிங்கள் மறைவையும் பிறவற்றையும் உணர்ந்து ஆற்றுவளென்றெண்ணினான். அல்லதூஉம் என்றது, முன் வருந்துவளோ என்றதனையும் உணர்த்தியது. அவட்கு வருத்த மில்லாமையை அவள், பின்னர் வரவிடும் ஓலையானும், இவன் சென்ற காலத்துக் குணமாலையிடத்தே போம் என்றதனானும் உணர்க.

( 75 )