பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 951 

அணிவித்து; மவ்வல் நாறும் குழலாட்கு - முல்லை மலரின் மணம் வீசும் கூந்தலை யுடையாட்கு; மற்றும் இவைகள் நாடினாள் - மேலும் இம் மருத்துவத்தைச் செய்யத் தொடங்கினாள்.

   (வி - ம்.) பவ்வம் - கடல், ஊறு - ஐம்புலனுள் ஒன்று, மன்னர் எவ்வம்பட என்க. எவ்வம் - துன்பம், செவ்வன் - நேரியதாகிய, மவ்வல் - முல்லை.

( 116 )
1673 களிசெய் கோசிக நீர்விழக்
  கடிமாலை மேற்றொ டர்ந்துகீழ்
நளிசெய் தண்பூஞ் சலஞ்சயன
  மாக்கி நன்னீர் பிலிற்றும்வாய்க்
குளிர்கொள் சாந்தாற்றி பொன்னால
  வட்டங்கொண் டேந்தி வீசச்
சளிகொள் சந்தின் கொழுஞ்சாந்த
  மாக முழுது மெழுகினாள்.

   (இ - ள்.) களி செய் கோசிக நீர் விழ - கஞ்சி தோய்த்த கோசிகப் பட்டின் நீர் விழும்படி; கடி மாலை மேல் தொடர்ந்து - மணமிகு மாலையால் வந்து விழும்படி அதனை மேலே கட்டி; கீழ் நளி செய்தண் பூஞ்சலம் சயனம் ஆக்கி - கீழே செறிவு செய்த பூவையுடைய நீரிலே படுக்கையை ஆக்கி; நன்னீர் பிலிற்றும் வாய்க் குளிர்கொள் சாந்தாற்றி பொன் ஆலவட்டம் கொண்டு ஏந்தி வீச - நல்ல நீரைத் துளிக்கும் வாயையுடைய குளிர்ந்த சாந்தாற்றியையும் பொன்னாலான ஆலவட்டத்தையும் கையில் ஏந்திப் பணிமகளிர் வீச; சளிகொள் சந்தின் கொழுஞ்சாந்தம் ஆகம் முழுதும் மெழுகினாள் - குளிர்ச்சியைக் கொண்ட சந்தனக் குழம்பை மெய்ம் முழுவதும் பூசினாள்.

   (வி - ம்.) களி - கஞ்சி, கோசிகம் - ஒருவகைப்பட்டு, நளி - செறிவு பூஞ்சலம் - மலரிட்ட நீர், சயனம் - படுக்கை, சாந்தாற்றி - சிற்றால வட்டம், சளி - குளிர்ச்சி, சந்து - சந்தனமரம்.

( 117 )
1674 கொம்மைவெம் முலையிற் சாந்தங்
  குளிர்செயா தாவி வாட்ட
வம்மென் மாலை முகங்கரிய
  நீர்துளும்ப நின்று நீடி
வெம்மை மிக்கது வீரன்
  றொடுத்த விளங்கு மாலை
பொம்ம லோதிக்குத் தானே
  துணையாம் புணையா யிற்றே.