பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 965 

   (வி - ம்.) நகா - குணமாலையின் வீடு என்பர் நச்சினார்க்கினியர்.

   விடலைக்குத் தம்பி என்றது நந்தட்டனை. மாழாத்தல் - மயங்குதல். சூழ்ச்சி மிக்கான் : சீவகன். புள், ஈண்டு வண்டு. மதித்தல் - குடைதல். மட்டு - தேன். மதி உள்வருந்த என்க.

( 139 )
1696 வெள்ளிவெண் மலைக்கு வேந்த
  னொருமகள் வேற்கட் பாவை
யொள்ளிழை யவளைக் கேட்பா
  னுறுவலி செல்லு மாங்கண்
வள்ளிதழ்க் கோதை தானே
  யிட்டதோர் வண்ணந் தன்னைக்
கொள்ளத்தான் முரல லுற்றுக்
  கோலமை வீணை கொண்டாள்.

   (இ - ள்.) வெள்ளி வெண் மலைக்கு வேந்தன் ஒரு மகள் - வெள்ளி மலைக்குத் தலைவனான கலுழவேகன் மகளாகிய; வேல் கண் பாவை ஒள்ளிழை அவளைக் கேட்பான் - வேலனைய கண்களையுடைய பாவையும் ஒளியிழைகளை அணிந்தவளுமான தத்தையைக் கேட்பதற்கு; உறுவலி செல்லும் ஆங்கண் - மிகு வலியுடைய நந்தட்டன் செல்லும்போது; வள் இதழ்க் கோதை தானே இட்டது ஓர் வண்ணம் தன்னை - வளவிய இதழையுடைய மலர்க் கோதையாள் தானே அமைத்ததொரு வண்ணத்தை; கொள்ளத் தான் முரலல் உற்றுக் கோல் அமை வீணை கொண்டாள் - தன் மனங் கொள்ளத் தானே பாடத் தொடங்கி நரம்பையுடைய யாழைக் கையிற் கொண்டாள்.

   (வி - ம்.) வெள்ளி வெண்மலை என்புழி வெண்மை இயல்படை. வேந்தன்; கலுழவேகன். ஒரு மகளும் வேற்கட்பாவையும் ஒள்ளிழையவளும் ஆகிய காந்தருவதத்தை என்க. கேட்பான் - கேட்டற்கு. உறுவலி: அன்மொழித் தொகை. வண்ணம் - பாடல். கோல் - நரம்பு

( 140 )
1697 ஆடகச் செம்பொ னாணி யானெய்வார்ந் தனைய திண்கோன்
மாடக நொண்டு கொண்டு மாத்திரை நிறைய வீக்கிச்
சூடக மணிந்த முன்கைத் தொகுவிரல் சேப்ப வெற்றித்
தோடலர் கோதை கீதந் துணிவினிற் பாடுகின்றாள்.

   (இ - ள்.) தோடு அலர் கோதை - இதழ் விரிந்த மலர் மாலையாள்; ஆடகச் செம்பொன் ஆணி ஆன்நெய் வார்ந்த அனைய திண்கோல் - ஆடகப் பொன்னால் ஆன ஆணியிற் கட்டின ஆவின் நெய் ஒழுகினாற் போன்ற திண்ணிய நரம்பினை; மாடகம் நொண்டு கொண்டு - முறுக்காணியினாலே முகந்து