பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 982 

1725 தாமரைத் தடக்கை கூப்பித்
  தாண்முதற் கிடந்த தம்பி
தாமரைத் தடத்தை யொத்தான்
  றமையனும் பருதி யொத்தான்
றாமரைக் குணத்தி னானை
  மும்முறை தழுவிக் கொண்டு
தாமரைச் செங்க ணானுந்
  தன்னுறு பரிவு தீர்ந்தான்.

   (இ - ள்.) தாமரைத் தடக்கை கூப்பித் தாள்முதல் கிடந்த தம்பி - தாமரை யனைய கையைக் குவித்து அடியிலே கிடந்த தம்பி; தாமரைத் தடத்தை ஒத்தான் - தாமரைக் குளம் போன்றான்; தமையனும் பருதி ஒத்தான் - சீவகனும் ஞாயிறு போன்றான்; தாமரைக் குணத்தினானை மும்முறை தழுவிக் கொண்டு - தாமரை யென்னும் எண்போல அளவில்லாத பண்புடைய நந்தட்டனை மூன்றுமுறை தழுவிக்கொண்டு தாமரைச் செங்கணானும் தன்உறு பரிவு தீர்ந்தான் - தாமரை மலரனைய கண்களையுடைய சீவகனும் தனக்குற்ற வருத்தமெல்லாம் நீங்கினான்.

   (வி - ம்.) சீவகன் பரிவு இருமுது குரவரை எண்ணியது.

( 169 )
1726 என்னுறு நிலைமை யோரா
  தெரியுறு தளிரின் வாடிப்
பொன்னுறு மேனி கன்றிப்
  போயினீர் பொறியி லாதேன்
முன்னுற விதனை யோரேன்
  மூரிப்பே ரொக்க லெல்லாம்
பின்னுறு பரிவு செய்தேன்
  பேதையேன் கவல லென்றான்.

   (இ - ள்.) என்உறு நிலைமை ஓராது எரியுறு தளிரின் வாடி; யானுற்ற நிலையை அறியாமல் தீயிலுற்ற தளிரைப்போல வாடி - பொன் உறு மேனி கன்றிப் போயினீர்-பொன்னனைய உங்கள் மெய்யெலாம் வெதும்பிப் போயினீர்; பொறி இலாதேன் முன் உற இதனை ஓரேன் - நல்வினை இல்லாதேன் முதலிலேயே இதனை அறியேனாகி; மூரிப் போரொக்கல் எல்லாம் பின் உறு பரிவு செய்தேன் - பெருமை மிக்க அளவற்ற உறவினர்க் கெல்லாம் பின்னர் மிகுவருத்தம் ஊட்டினேன்; பேதையேன் கவலல் என்றான் - அறிவிலேன் யான்; நீ வருந்தாதே என்றான்.