பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 991 

1740 வருவர்நங் கேள்வ ரின்னே
  வாணுதற் பசலை தீர
வுருகிநைந் துடன்று முன்கை
  வளையுக மெலிய வேண்டா
வருவிமும் மதத்த யானை
  யதிர்ந்துழிக் காரென் றெண்ணித்
தெரிவில பேதை முல்லை
  பூத்தன தெளியி தென்றான்.

   (இ - ள்.) அருவி மும்மதத்த யானை அதிர்ந்துழிக் கார் என்று எண்ணி - அருவி மும்மதஞ் சொரியும் யானை பிளிறுதலைக் கேட்டுக் கார்முழக்கமென எண்ணி; தெரிவில பேதை முல்லை பூத்தன - அறியாதனவாய்ப் பேதைமையுடைய முல்லைகள் மலர்ந்தன; இது தெளி - இதனை உணர்வாயாக (எனவே); வாள்நுதல் பசலைதீர நம் கேள்வர் வருவர் - ஒளி பொருந்திய நுதலையுடைய நின் பசலை நீங்க நம் காதலர் குறித்த பருவத்தே வருவர்; இன்னே உருகி நைந்து உடன்று முன் கைவளை உகமெலிய வேண்டா - நீ இப்போது உருகி வருந்திச் சினந்து முன்கை வளைகள் கழன்று விழ மெலிய வேண்டா.

   (வி - ம்.) இது, பருவம் அன்று என்று தலைவியை ஆற்றுவித்துத் தூது செல்கின்ற பாணன் கூற்று ; ' நிம் பெயர்த்துறைதல், வரைநிலை, உரைத்தல் - கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய' (தொல். கற்பு. 28) என்னும் கற்பியற் சூத்திரத்தானும், 'அரக்கத்தன்ன....தேரே' என்னும் (14) அகப்பாட்டில், 'யாங்கா குவங்கொல் பாணவென்ற - மனையோள் சொல்லெதிர் சொல்லல் செல்லேன் - செவ்வழி நல்யாழ் இசையினென்பையெனக் - கடவுள் வாழ்த்திப் பையுண் மெய்ந்நிறுத் - தவர்திறஞ் செல்வேன் கண்டனென் யானே' என்பதனானுங் கொள்க.

   எனவே, சீவகன் இப்பொழுதுவாரான் என்பதூஉம், யாம் சென்று பின்பு கொண்டு வருவோம் என்பதூஉம், இதற்குக் கருத்தென்று தேறிப் போர்த்தொழில் தவிர்தல் பயனாம். இனி 'என்றாள்' என்று பாடம் ஓதித் தோழி ஆற்றுவித்தாள் என்றல் ஈண்டைக்குப் பொருந்தாது. 'இன்னே வருவர்' எனக் கூட்டி, இப்பொழுதே வருவர் என்றால், இவனும் இப்பொழுதே வருவன் என்பது கருத்தாம் ஆதலின் பொருந்தாது. அருவி மும்மதத்த - அருவி போன்ற மூன்று மதத்தையுடைய. இஃது உவமைத்தொகை.

( 184 )
1741 பாட்டினைக் கேட்ட லோடும்
  பழம்பகை நட்பு மாமே
யோட்டியுங் கோறு மன்றே
  நம்பிதா னுண்மை பெற்றா
னாட்டிடம் பரந்து போகி
  நாடுது நாங்க ளென்னா
வீட்டமும் வேறு மாகி
  யிலைப்புரை கிளைத்திட் டேமே.