பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 992 

 

   (இ - ள்.) பாட்டினைக் கேட்டலோடும் - பாட்டைக் கேட்ட அளவிலே; நம்பிதான் உண்மை பெற்றால் ஓட்டியும் கோறும் அன்றே - (அதன் பொருளைப் போலவே) சீவகன் உயிருடன் இருப்பதை அறிந்தாற், சிலநாள் கழித்தும் கட்டியங்காரனைக் கொல்வோம் அன்றோ?; பழம்பகை நட்பும் ஆமே - 'பழம்பகை நட்பு ஆதல் இல்' என்னும் பழமொழியும் உள்ளதன்றே?; நாங்கள் நாட்டிடம் பரந்துபோகி நாடுதும் என்னா - இனி, யாம் நானிலமெங்கும் பரவிச் சென்று தேடுவோம் என்று கருதி; ஈட்டமும் வேறும் ஆகி இலைப்புரை கிளைத்திட்டேம் - திரண்டும் தனித்தும் எவ்விடமும் தேடினோம்.

   (வி - ம்.) ஆமே : ஏ : எதிர்மறை. நாடு : நானிலத்திற்கும் பொதுப் பெயர். 'இலைப்புரை கிளைத்தல்' 'பழம்பகை நட்பாதல் இல்' என்பவை பழமொழிகள்.

( 185 )
1742 மணிபொதி துகிலிற் றோன்று
  மஞ்சுசூழ் வரைக ணாடி
யணிநகர் யான்சென் றெய்தி
  மாலைதன் மனையைச் சோ்ந்தேன்
றுணைமலர்க் காந்த ளூழ்த்துச்
  சொரிவபோற் றோன்றி முன்கை
யணிவளை நலத்தோ டேக
  வங்ஙன மிருந்து நைவாள்.

   (இ - ள்.) மணிபொதி துகிலின் தோன்றும் மஞ்சுசூழ் வரைகள் நாடி - நீலமணியை மூடிய ஆடையைப் போலத் தோன்றும் முகில் சூழ்ந்த மலைகளைத் தேடி; யான் அணிநகர் சென்று எய்தி மாலைதன் மனையைச் சேர்ந்தேன் - யான் அழகிய நகரிற்போய்ச் சேர்ந்து குணமாலையின் அகத்தை அடைந்தேன்; துணைமலர்க் காந்தள் ஊழ்த்துச் சொரிவபோல். தோன்றி - (அப்போது) துணையாக மலர்ந்த காந்தட்பூ முதிர்ந்து உதிர்வன போலத் தோன்றி; அணிவளை நலத்தோடு ஏக அங்ஙனம் இருந்து நைவாள் - அழகிய வளை அழகுடன் செல்ல அவ்வாறு இருந்து வருந்துகின்றவள்.

   (வி - ம்.) இப் பாட்டுக் குளகம். காந்தள் மலர் வளைக்கு உவமை 'வளையுடைந்தன்ன வள்ளிதழ்க் காந்தள்' (மலைபடு. 159) என வருதல் காண்க.

( 186 )