பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 994 

சாயலாள் தன் பேது கண்டு ஆங்கு மீண்டேன் - பெட்டை மயிலின் தோற்றத்தையுடைய அவளுடைய வருத்தம் கண்டு அங்கிருந்தும் மீண்டேன்.

   (வி - ம்.) 'பெடைமயில் ' என்றார் பொலிவு கெடுதலின்.

   அடிகளை என்றது, சீவகனை, கடியிர் - கொடியீர் , சாயலாள் : குணமாலை. பேது - துன்பம்.

( 188 )
1745 செல்வனை யின்று நாடிச்
  சேவடி தொழுத லொன்றோ
வல்லதிவ் வுடம்பு நீங்க
  வேற்றுல கடைத லொன்றோ
வெல்லையிவ் விரண்டி னொன்றை
  யிப்பகன் முடிப்ப லென்னா
மல்லிகைக் கோதை யைம்பான்
  மலைமகண் மனையைச் சோ்ந்தேன்.

   (இ - ள்.) இன்று செல்வனை நாடிச் சேவடி அடைதல் ஒன்றோ - இன்று நம் தலைவனைத் தேடிக்கொண்டு சேவடியை வணங்குதல் ஒன்றாவது; அல்லது இவ்வுடம்பு நீங்க வேற்றுலகு அடைதல் ஒன்றோ - அன்றி இம்மெய் விலக வேற்றுலகை நண்ணுதல் ஒன்றாவது; எல்லை இவ்விரண்டின் ஒன்றை - முடிவாக இவ்விரண்டினுள் ஒன்றை; இப் பகல் முடிப்பல் என்னா - இப்பகலிலேயே முடிப்பேன் என்று கருதி; மல்லிகைக் கோதை ஐம்பால் மலைமகள் மனையைச் சேர்ந்தேன் - மல்லிகை மாலையணிந்த கூந்தலையுடைய தத்தையின் இல்லத்தை அடைந்தேன்.

   (வி - ம்.) செல்வனை - சீவகனை, வேற்றுலகடைதல் - சாதல். முடிப்பல் - தன்மை ஒருமை வினைமுற்று. மலைமகள் - காந்தருவதத்தை.

( 189 )
1746 மணியொலி வீணை பண்ணி
  மாண்டகோ றடவ மாத
ரணிமுலைத் தடத்தி னொற்றி
  வெப்பராற் றட்ப மாற்றிப்
பிணைமலர்க் கோதை கீதம்
  பாடயான் பெரிதும் பேதுற்
றிணைமலர்க் கண்ணிக் கொவ்வா
  விளிவரு கிளவி சொன்னேன்.

   (இ - ள்.) பிணைமலர்க் கோதை மாதர் - மலர் பிணைந்த கோதையை உடைய அம் மாதராள்; மணி ஒலி வீணை பண்ணி -